தமிழக பட்ஜெட்டில் அண்ணா பெயரில் நலத்திட்டங்கள் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


தமிழக பட்ஜெட்டில் அண்ணா பெயரில் நலத்திட்டங்கள் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Jun 2021 11:31 PM GMT (Updated: 30 Jun 2021 11:31 PM GMT)

காஞ்சீபுரத்தில் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக பட்ஜெட்டில் அண்ணா பெயரில் புதிதாக நலத்திட்டங்கள் அறிவிக்கப்படும் என கூறினார்.

சென்னை,

காஞ்சீபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்கு நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.

அங்குள்ள அண்ணாவின் உருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேடு புத்தகத்தில், “மக்களிடம் செல், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று என்று அண்ணா தந்த அறிவுரைப்படி இந்த ஆட்சி பீடுநடை போடும் என்று உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கைப்பட மு.க.ஸ்டாலின் எழுதினார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. 6-வது முறையாக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர், காஞ்சீபுரத்திற்கு வருகை தந்து அறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்தில் வாழ்த்து பெறவேண்டும் என்று நான் கருதிக்கொண்டு இருந்தேன். கொரோனா தொற்றின் காரணமாக, ஊரடங்கு இருக்கின்ற இந்த சூழ்நிலையில், அதற்கான வாய்ப்பு இன்றைக்குத்தான் எனக்கு கிடைத்தது.

எனவே, அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, எங்களை ஆளாக்கிய, தி.மு.க.வை உருவாக்கிய அறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்திற்கு வருகை தந்து, அவருடைய உருவச் சிலைக்கு மாலை அணிவித்து நான் மரியாதை செலுத்துகிறேன்.

“மக்களிடம் செல், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று” என்ற அறிவுரையை தம்பிமார்களுக்கு அவர் எப்போதும் வழங்கிக்கொண்டு இருந்தவர். அதை நினைவுப்படுத்தி, “அவர் தந்த அறிவுரைப்படி இந்த ஆட்சி பீடுநடை போடும் என்று உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்” என்று நான் அவருடைய இல்லத்திற்கு வந்திருக்கின்ற இந்த நேரத்தில் குறிப்பேடு புத்தகத்தில் கூட நான் எழுதியிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் அவரிடம், “ஏற்கனவே, அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்று அவருடைய பெயரில் பல நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டது, இந்த ஆட்சிக்காலத்திலும் அதுபோன்று தொடர்ச்சியாக அரசுத் திட்டங்களுக்கு அவர் பெயர் வைக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “விரைவில் நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறபோது, நீங்கள் எதிர்பார்ப்பது போல அந்த செய்திகள் எல்லாம் வரும்” என்றார்.

Next Story