தொழில்நுட்பம் என்னதான் வளர்ந்தாலும் தஞ்சை பெரியகோவிலை போல இனி கட்ட முடியுமா? ஐகோர்ட்டு கேள்வி


தொழில்நுட்பம் என்னதான் வளர்ந்தாலும் தஞ்சை பெரியகோவிலை போல இனி கட்ட முடியுமா? ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 15 July 2021 3:18 AM GMT (Updated: 15 July 2021 3:18 AM GMT)

தொழில்நுட்பம் என்னதான் வளர்ந்தாலும் தஞ்சை பெரியகோவிலை போல் இனிமேல் கட்ட முடியுமா என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்மாணிக்கவேல் ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்ததாகவும், வழக்கு விசாரணை தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தர மறுத்ததாகவும் குற்றச்சாட்டுகளை கூறி, இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை கொரட்டூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் சேகர்ராம் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் அடையாள அட்டை நீதிபதிகளிடம் வழங்கப்பட்டது. அப்போது, மனுதாரரின் அடையாள அட்டைகளுடன் சிலை கடத்தல் வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி காதர் பாஷாவின் அடையாள அட்டையும் இருப்பதை கண்டு நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், பத்திரிக்கையாளர் என்ற பதவியை மோசடி பேர்வழிகள் பலர் கேடயமாக பயன்படுத்திக்கொள்கின்றனர் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் எத்தனை பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் உள்ளனர் என்பது உள்பட பல கேள்விகளை கேட்டு அதுகுறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உன்னதமான பத்திரிகை பணியை சிலர் தவறாக பயன்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது என்று கருத்து தெரிவித்தனர்.

மேலும், தமிழகத்தில் மிகவும் பாரம்பரியமிக்க ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் உள்ளன. இவற்றில் உள்ள சிலைகள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பாக பதிவு செய்யப்படும் வழக்குகள் பெரும்பாலும் ரத்து செய்யப்படும் வகையிலேயே உள்ளன. ராஜராஜ சோழன் சிலை காணாமல் போய் குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிலை களவு போனது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் தஞ்சை பெரியகோவிலை போல் இனிமேல் ஒரு கோவிலை கட்ட முடியுமா? இதுபோன்ற பழமையான கோவில்களை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் குக்கிராமங்களிலும் பழமையான கோவில்களும், சிலைகளும், அரிய கலைப்பொருட்களும் உள்ளன. இவற்றை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்று கூறி விசாரணையை 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story