பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறைகளில் பணியிட மாற்றத்துக்கு யாரும் லஞ்சம் கொடுக்க கூடாது அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை


பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறைகளில் பணியிட மாற்றத்துக்கு யாரும் லஞ்சம் கொடுக்க கூடாது அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 July 2021 8:07 PM GMT (Updated: 21 July 2021 8:07 PM GMT)

‘பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறைகளில் பணி மாற்றத்துக்காக யாரும் லஞ்சம் கொடுக்க கூடாது’ என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை,

பொதுவாக அரசு ஊழியர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியில் இருந்தால் நிர்வாக ரீதியாக அவர்களுக்கு பணியிட மாறுதல் அளிப்பது எப்போதும் நடைமுறையில் உள்ளது. தி.மு.க. அரசு தற்போது பொறுப்பேற்று உள்ள நிலையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எத்தனை ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிகிறார்கள்? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அதில் பலர் 5 ஆண்டு முதல் 7 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிவது அரசின் கவனத்துக்கு வந்தது. நான் அமைச்சர் பொறுப்பு ஏற்றவுடன் முதலில் பொறியாளர் சங்க நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தி பணி மாற்றத்துக்கு யாரும் லஞ்சம் கொடுக்க கூடாது என்று அறிவுரை சொன்னேன்.

மாறுதல் ஆணை

இந்த துறையில் 10 அலகுகள் உள்ளன. அவற்றில்தான் பல ஆண்டுகளாக பணிபுரிபவர்களை மாற்றம் செய்ய முடியும். பிற துறைகளில் உள்ள மாறுதல் நடைமுறையை நெடுஞ்சாலைத்துறையில் கடைபிடிக்க முடியாது. மேலும், கலந்தாலோசனை முறையில் மாறுதல் கடைபிடிக்கப்பட்டால் பணிமூப்பு அடிப்படையில் மூத்த அனுபவம் வாய்ந்த என்ஜினீயர்கள் அனைவரும் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து மாறுதல் ஆணை பெற்று விடுவார்கள்.

இதன் விளைவாக மூத்த அனுபவம் வாய்ந்த என்ஜினீயர்கள் இதர பணிகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். மேலும் 10 தலைமை என்ஜினீயர்கள் கண்காணிப்பு என்ஜினீயர்கள், கோட்டஎன்ஜினீயர்கள் ஆகிய அதிகாரிகள் அடங்கிய ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.

லஞ்சம் கொடுக்க கூடாது

அப்போது பல ஆண்டுகளாக தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிபவர்கள் மாறுதல் வேண்டுபவர்கள் யாரிடமும் லஞ்சம் கொடுத்தல் கூடாது என்றும், அது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடக்கூடாது என்றும் கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாறுதலுக்கு உரிய விண்ணப்பம் வரைவு செய்யப்பட்டு, அதில் மாறுதலுக்கு 3 இடங்களை தெரிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

அப்படி 3 இடங்களை குறிப்பிட்டு பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் எந்தவித குற்றச்சாட்டுகளுக்கு இடமில்லாமல் வெளிப்படையான அனுகுமுறையில் அதிகாரிகளுக்கு மாறுதல் வழங்கப்பட்டன. நெடுஞ்சாலைத்துறையில் செய்யப்பட்ட மாறுதல் உத்தரவு அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

இதில் யாராவது தவறான வழியில் ஈடுபட்டு இருந்தால் அரசின் கவனத்துக்கு வருமேயானால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story