டுவிட்டர் கணக்கு மீட்கப்பட்டதாக குஷ்பு டுவீட்


டுவிட்டர் கணக்கு மீட்கப்பட்டதாக குஷ்பு டுவீட்
x
தினத்தந்தி 24 July 2021 1:08 PM GMT (Updated: 24 July 2021 1:08 PM GMT)

முடக்கப்பட்ட எனது டுவிட்டர் கணக்கை மீட்டுக்கொடுத்த டிஜிபி, போலீசாருக்கு நன்றி என குஷ்பு கூறியுள்ளார்.

சென்னை,

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் டுவிட்டர் கணக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹேக் செய்யப்பட்டது. 1.03 மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்ட குஷ்புவின் டுவிட்டர் கணக்கில் இருந்த பதிவுகள் டெலிட் செய்யப்பட்டது அவரது பெயர் மற்றும் புகைப்படமும் மாற்றம் செய்யப்பட்டது. இது குறித்து குஷ்பு டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்தார். தனது கணக்கை யாரும் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக புகார் அளித்திருப்பதாக விளக்கம் அளித்தார்.

குஷ்பு அளித்த புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சைலேந்திர பாபு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் படி, இந்த விவகாரத்தை கையிலெடுத்த சைபர் கிரைம் போலீசார் குஷ்புவின் டுவிட்டர் கணக்கை முடக்கியது யார் என்ற விவரத்தை தருமாறும் அந்த கணக்கை மீண்டும் அவரிடமே வழங்குமாறும் டுவிட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து, குஷ்புவின் டுவிட்டர் கணக்கு மீண்டும் அவருக்கே வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஹேக் செய்தவர்கள் யார் என்பதன் விவரங்கள் தெரியவரவில்லை.

இந்த நிலையில், தனது டுவிட்டர் கணக்கை பாதுகாப்புடன் மீட்டுக் கொடுத்த டிஜிபி சைலேந்திர பாபுவிற்கும் அவரது குழுவினருக்கும் நன்றி தெரிவித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், புதிதாக முகப்பு புகைப்படத்தையும் தற்போது மாற்றியுள்ளார்.



Next Story