‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம்: 1 கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை, மருந்துகள், மருத்துவ சிகிச்சை


‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம்: 1 கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை, மருந்துகள், மருத்துவ சிகிச்சை
x
தினத்தந்தி 28 July 2021 2:23 AM GMT (Updated: 28 July 2021 2:23 AM GMT)

1 கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை, மருந்துகள், மருத்துவ சிகிச்சைகள் வழங்கும் வகையில் ‘மக்களை தேடி மருத்துவம்’ எனும் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

எந்த சேவைகளையும் மக்கள் தேடி வந்து பெற்றுக்கொள்ளும் நிலை இருப்பதை விட, மக்களை தேடிச்சென்று வழங்குவதே சாலச்சிறந்தது என்ற வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்தவகையில் அவரது உத்தரவின்பேரில் ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டம் தொடங்கப்பட இருக்கிறது.

தமிழகத்தில் முதற்கட்டமாக 20 லட்சம் பேருக்கு இந்த சேவைகளும், அடுத்து விரைவில் 1 கோடி பேருக்கும் வழங்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் மருந்து-மாத்திரைகள் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு செல்கிறார்கள். கடந்த 1½ ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் பொது போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில் மக்கள், குறிப்பாக கிராமப்பகுதிகள், மலைப்பகுதிகளில் உள்ள மக்கள் மருந்து-மாத்திரைகளை சென்று வாங்காமல், அதை சாப்பிடாத நிலையில் அவர்களது நீரிழிவு நோயின் அளவு கட்டுக்கடங்காமல் போய்விட்டது. ரத்த அழுத்தமும் மிக அதிகமாக உயர்ந்துவிட்டது.

புற்றுநோய், சிறுநீரக சிகிச்சைகளுக்கும்...

பொதுவாக கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கே அதிகமாக ஏற்பட்டு இருக்கிறது. 60 வயதை கடந்தவர்களிலும் 60 சதவீத உயிரிழப்பு ஏற்படுவதற்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கான மருந்து-மாத்திரைகளை தினமும் முறையாக சாப்பிடாததுதான் காரணம். இந்த 20 லட்சம் பேருக்கும் மருந்து-மாத்திரைகளை அவர்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று கொடுக்கும் திட்டம் தான் இந்த ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம்.

இதேபோல தொற்றா நோய்களான புற்றுநோய், காசநோய், சிறுநீரக சிகிச்சைகளுக்கும் வீடு தேடி மருத்துவம் பார்க்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக சிறுநீரக கோளாறு காரணமாக வாரத்துக்கு 2 முறை ‘டயாலிசிஸ்’ செய்ய வேண்டியவர்கள், ஆஸ்பத்திரிகளுக்கு சென்று ஆயிரக்கணக்கில் செலவழித்து மருத்துவம் பார்க்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்காக கையில் எடுத்துச்சென்று ‘டயாலிசிஸ்’ சிகிச்சை அளிக்கும் ‘போர்டபிள் டயாலிசிஸ்’ கருவியை எடுத்துக்கொண்டு, அவர்களின் வீடுகளுக்கு சென்று ‘டயாலிசிஸ்’ சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

உயிரிழப்பு பாதியாக குறையும்

இதுபோல முடக்குவாதத்தால் அவதிப்படுவோருக்கு வீடுகளுக்கே சென்று ‘பிசியோதெரபி’ சிகிச்சை அளிக்கப்படும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் விரைவில் 1 கோடி பேரை அடையாளம் கண்டு அவர்களுக்கு வீடு தேடி சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

அடுத்த (ஆகஸ்டு) மாதம் முதல் வாரத்தில் இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் தொடங்கி வைக்கிறார். தற்சமயம் இதுபோன்ற தொற்றா நோய்களால் ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பேர் வரை இறக்கும் நிலை இருக்கிறது. இந்த வீடு தேடி மருத்துவம் திட்டத்தால் வீடுகளுக்கே சென்று மருந்து-மாத்திரைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதின் மூலம் 2 அல்லது 3 ஆண்டுகளில் உயிரிழப்பு பாதியாக குறைந்துவிடும்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Next Story