கமல்ஹாசனுக்கு வரவேற்பு அளித்ததில் விதிமீறல்; ம.நீ.ம. நிர்வாகிகள் மீது வழக்கு


கமல்ஹாசனுக்கு வரவேற்பு அளித்ததில் விதிமீறல்; ம.நீ.ம. நிர்வாகிகள் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 Aug 2021 6:59 AM GMT (Updated: 2 Aug 2021 6:59 AM GMT)

கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை வரவேற்ற அக்கட்சி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



கோவை,

தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டது.

அதன்படி, கமல்ஹாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்துள்ளார்.  அவருக்கு விமான நிலையத்தில் கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரனை சந்தித்து கிராமசபை கூட்டம் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மனு கொடுத்துள்ளார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, கிராம சபை கூட்டங்களை நடத்த கோரி கோவை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். அடுத்த கிராம சபை கூட்டம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை வரவேற்ற அக்கட்சி நிர்வாகிகள் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விதிகளை மீறுதல், அனுமதியின்றி ஓரிடத்தில் ஒன்று கூடுதல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், மாநில துணை தலைவர் தங்கவேல், மாநில நிர்வாகிகள் அனுஷ ரவி, மயில்சாமி, ரங்கநாதன், ரத்தினம் ஆகியோர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.




Next Story