நீலகிரி, கோவை உள்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பரவலாக பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வருகிற 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 9ந்தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 36 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, வருகிற 9ந்தேதி வரை அரபி கடலில் தென்மேற்கு, மத்திய மேற்கு, வடக்கு பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் 4 நாட்களுக்கு அப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story