பொள்ளாச்சி அருகே அனுமதி பெறாமல் படப்பிடிப்பு: சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு ரூ.19 ஆயிரம் அபராதம்


பொள்ளாச்சி அருகே அனுமதி பெறாமல் படப்பிடிப்பு: சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு ரூ.19 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 9 Aug 2021 11:16 PM GMT (Updated: 9 Aug 2021 11:16 PM GMT)

அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதால் சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு ரூ.19 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் இயக்குனர் உள்பட 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பொள்ளாச்சி,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தை திரைப்பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை உப்பாற்று பகுதியில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

பின்னர் முக்கோணத்தில் படப்பிடிப்புகள் நடைபெற்றன. அப்போது பொதுமக்கள், குழந்தைகள் கூட்டமாக நிற்பது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்தப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

பொதுமக்கள் திரண்டனர்

அந்தப்பகுதியில் பொதுமக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் கூட்டம் கூடியதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும் அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நேரத்தில் படப்பிடிப்பு நடத்த அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வால்பாறை தாசில்தார் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கொரோனா பரவும் வகையில் கூட்டமாக நின்றதால் படப்பிடிப்பை பாதியில் நிறுத்தினர். இதைதொடர்ந்து அங்கு நின்ற பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

ரூ.19 ஆயிரம் அபராதம்

இதைத்தொடர்ந்து கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மீறியதாக படக்குழுவினருக்கு வருவாய்த்துறையினர் ரூ.19 ஆயிரத்து 400 அபராதம் விதித்தனர். மேலும் இதுகுறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், கொரோனா நோய் தொற்று பரவும் வகையில் கூட்டம் கூடுதல், அரசின் தடை உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திரைப்பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி உள்பட படக்குழுவினர் 31 பேர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அனுமதி பெறவில்லை

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, படப்படிப்பை நடத்த அனுமதி பெறவில்லை. கொரோனா பரவும் காலத்தில் அனுமதி இல்லாமல் படப்பிடிப்பை நடத்தி, தொற்று பரவும் வகையில் செயல்பட்டதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றனர்.


Next Story