கரூர் மாவட்ட பதிவாளர் பணியிடை நீக்கம்


கரூர் மாவட்ட பதிவாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 23 Aug 2021 6:27 PM GMT (Updated: 23 Aug 2021 6:27 PM GMT)

ணக்கில் வராத பணம் வைத்திருந்த கரூர் மாவட்ட பதிவாளர் பாஸ்கரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கரூர்,
ரகசிய தகவல்
கரூர் மாவட்ட பத்திரப்பதிவுத்துறை மாவட்ட பதிவாளராக (நிர்வாகம்) பணிபுரிந்தவர் பாஸ்கரன் (வயது 56). இவர் ஆய்வுக்கு சென்ற போது லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் தலைமையிலான போலீசார், கடந்த 12-ந்தேதி உப்பிடமங்கலம் சாலையில் பாஸ்கரன் வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது பாஸ்கரன் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் சந்திரசேகரன் ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத ரூ.48 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.
பணியிடை நீக்கம்
இது தொடர்பாக கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதனையடுத்து பாஸ்கரன் மற்றும் டிரைவர் சந்திரசேகரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் திருச்சி சரக பதிவுத்துறை டி.ஐ.ஜி. லதா, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் உள்ள பாஸ்கரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
நியமனம்
மேலும் பாஸ்கரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட பதிவாளராக (நிர்வாகம்) பணியாற்றி வரும் குமார், கரூர் நிர்வாக மாவட்ட பதிவாளராக முழுகூடுதல் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Next Story