வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 23 Aug 2021 7:58 PM GMT (Updated: 23 Aug 2021 7:58 PM GMT)

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடைஇடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தலா 7 செ.மீ. மழையும், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 6 செ.மீ. மழையும், வேலூர் மாவட்டம் காட்பாடியில் 5 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story