தமிழகம் முழுவதும் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு; வாசலில் நின்று தரிசனம்
விநாயகர் சதூர்த்தியான இன்று தமிழகம் முழுவதும் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோவில் வாசலில் நின்று தரிசனம் செய்தனர்.
சென்னை
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், விநாயகர்சதுர்த்தி விழாவிற்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விநாயகர் சிலைகள் 3 அடிக்கு மிகாமல் பொதுமக்கள் வீட்டினுள்ளேயே வழிபட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவோ, ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவோ அரசு தடை விதித்துள்ளது. மேலும், அரசு வழிகாட்டுதல்களை மீறி செயல்படும் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எந்தவித அசாம்பாவிதம் ஏற்படாத வகையில், மாநகரம் முழுவதும் சட்டம் ஒழுங்கு போலீசார், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
சேலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயிலில் ராஜகணபதிக்கு தங்க கவச அலங்காரம் நடைபெற்றது; பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கோவில் வாசலில் நின்று தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிரே தடையை மீறி இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டியில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காததால் வெறிச்சோடி கிடக்கும் பிள்ளையார்பட்டி கோவில்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் இன்று பக்தர்கள் தரிசிக்க அனுமதியில்லை. மாணிக்க விநாயகருக்கு 30 கிலோ, உச்சிப்பிள்ளையாருக்கு 30 கிலோ என 60 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் குறைந்த அளவிலான விநாயகருக்கு படைக்கப்பட்டது.
திருச்சி, தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி விநாயகர் சிலை வைத்து இந்து முன்னணியினர் வழிபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
Related Tags :
Next Story