தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 10 Sep 2021 7:56 AM GMT (Updated: 10 Sep 2021 7:56 AM GMT)

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர் ,தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர்,தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வருகின்ற 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர், திண்டுக்கல் , திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

14ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி ,கோயம்புத்தூர் ,திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் ,இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையை பொருத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

மத்திய வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வரக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் 14ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story