முகநூலில் பெண் போல பழகி ஏமாற்றியவர் கொலை காஞ்சீபுரம் வாலிபர் கைது


முகநூலில் பெண் போல பழகி ஏமாற்றியவர் கொலை காஞ்சீபுரம் வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Sep 2021 8:55 PM GMT (Updated: 19 Sep 2021 8:55 PM GMT)

எட்டயபுரம் அருகே முகநூலில் பெண் போல் பழகி ஏமாற்றியவரை கொலை செய்ததாக காஞ்சீபுரத்தை சேர்ந்த வாலிபரை கைது செய்யப்பட்டுள்ளனார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலஈராலை சேர்ந்தவர் முருகன் (வயது 27). 10-ம் வகுப்பு வரை படித்தவர். விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், கடந்த 15-ந்தேதி காலை எட்டயபுரம் அருகே முருகன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

முருகன் தலையில் அடிபட்டு இருந்த காரணத்தினால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதிய போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படையும் அமைக்கப்பட்டது. முருகன் செல்போனை கைப்பற்றி அதனை ஆய்வு செய்தனர். அதில் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்ததை கண்டறிந்தனர்.

காஞ்சீபுரம் வாலிபர் கைது

இதைத்தொடர்ந்து அந்த செல்போன் எண் யாருடையது? என போலீசார் விசாரணை நடத்தினர். அந்த எண் காஞ்சீபுரம் மாவட்டம் தாமல் பகுதியை சேர்ந்த முருகன் (24) என்பவருடையது என தெரியவந்தது.

இந்த நிலையில் கொலை நடந்த இடத்திற்கு நேற்று முன்தினம் காஞ்சீபுரத்தில் இருந்து முருகன் வந்தார். அந்த பகுதியில் அவர் மணிபர்சை தேடியபோது போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர். விசாரணையில், மேலஈரால் முருகனை, காஞ்சீபுரம் முருகன் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காஞ்சீபுரம் முருகனை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு-

முகநூல் நட்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகன் 12-ம் வகுப்பு வரை படித்து விட்டு வாகனங்களுக்கான கூலிங் கண்ணாடி தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது முகநூல் பக்கத்திற்கு அமுதா என்ற பெயரில் குறுஞ்செய்தி வந்தது. நாளடைவில் இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறி பேச தொடங்கினர்.

பின்னர் இருவரும் தங்களது புகைப்படத்தை பகிர்ந்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் சந்திக்க இருவரும் முடிவு செய்தனர்.

ஆனால் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தான் காதலித்தது பெண் அல்ல, அது ஆண் என்று தெரியவந்தது. 2 ஆண்டுகளுக்கு மேலாக மேலஈரால் முருகன் பெண் குரலில் பேசியும், வேறொரு பெண்ணின் புகைப்படத்தை அனுப்பியும் தன்னை ஏமாற்றியது காஞ்சீபுரம் முருகனுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் காஞ்சீபுரம் முருகனை, முருகன் சமாதானப்படுத்தினார். பின்னர் முருகன் அங்குள்ள கழிவறை பகுதிக்கு சென்று காஞ்சீபுரம் முருகனை ஓரின சேர்க்கையில் ஈடுபட வைத்துள்ளார். இதை முருகன், காஞ்சீபுரம் முருகனுக்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார்.

மிரட்டல்

அதன்பின்னர் காஞ்சீபுரம் முருகன் ஊருக்கு சென்றதும் தன்னுடைய செல்போன் எண்ணை மாற்றி விட்டு, புதிய எண் பெற்றார். இதை அறிந்த முருகன், காஞ்சீபுரம் முருகனின் குடும்பத்தினரிடம் பேசி அவரது செல்போன் எண்ணை வாங்கி பேசியுள்ளார். அப்போது தன்னிடம் ஓரின சேர்க்கை வீடியோ உள்ளதாகவும், ரூ.50 ஆயிரம் கேட்டும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 14-ந்தேதி காஞ்சீபுரத்தில் இருந்து எட்டயபுரத்திற்கு சென்ற காஞ்சீபுரம் முருகன், மதுவில் விஷம் கலந்து முருகனுக்கு கொடுத்ததோடு தலையிலும் கல்லை போட்டு கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Next Story