மக்கள் விரும்பினால் பதவிக்கு வருவேன் ம.தி.மு.க. விழாவில் துரை வைகோ பேச்சு


மக்கள் விரும்பினால் பதவிக்கு வருவேன் ம.தி.மு.க. விழாவில் துரை வைகோ பேச்சு
x
தினத்தந்தி 21 Sep 2021 9:45 PM GMT (Updated: 21 Sep 2021 9:45 PM GMT)

தொண்டர்கள் விரும்புவது போன்று, மக்களும் விரும்பினால் பதவிக்கு வருவேன் என்று ம.தி.மு.க. விழாவில் துரை வைகோ பேசினார்.

சென்னை,

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் அரங்கம் ஒன்றில், வடசென்னை கிழக்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் பெரியார், அண்ணா, வைகோ ஆகியோரின் பிறந்தநாள் விழாக்கள் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வடசென்னை கிழக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஜீவன் தலைமை தாங்கினார்.

விழாவில், வைகோவின் 77-வது பிறந்தநாள் விழாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும், சகாப்தம் என்ற யூடியூப் சேனலையும் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

விழாவில், ஈரோடு தொகுதி ம.தி.மு.க. எம்.பி. அ.கணேசமூர்த்தி, ம.தி.மு.க. அரசியல் ஆய்வு மைய செயலாளர் மு.செந்திலதிபன், எம்.எல்.ஏ.க்கள் கு.சின்னப்பா, டாக்டர் ரகுராமன், மூ.பூமிநாதன், ம.தி.மு.க. ஆட்சிமன்ற செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் துரை வைகோ நலத்திட்ட உதவிகளை வழங்கி நிறைவுரை வழங்கினார்.

பெரியாரும், பெருமாளும் உண்டு

அப்போது, அவர் பேசியதாவது:-

ம.தி.மு.க. இயக்க வரலாற்றிலும், வைகோவின் வரலாற்றிலும் வைகோவின் பிறந்தநாளை கொண்டாடுவது இதுதான் முதல் நிகழ்ச்சி.

நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று எல்லோரும் கூறுகின்றனர். அதை நான் அப்போதே அறிவித்துவிட்டேன், துரை வையாபுரி முடிந்துவிட்டது, துரை வைகோ தொடங்கி விட்டது என்று சொல்லிவிட்டேன். நிறைய பேர், என்னை பதவிக்கு வர வேண்டும் என்றும் கூறுகிறார்கள். நான் அதற்கு தயாராக வேண்டும். பக்குவப்பட வேண்டும். சொல்லாற்றல், செயலாற்றலை பெருக்க வேண்டும். தொண்டர்கள் கூறுவது போன்று மக்களும் நான் பதவிக்கு வரவேண்டும் என்று கூறும் போது நான் பதவிக்கு வருவேன்.

நான் பெருமாளை வணங்குபவன். திராவிட இயக்க அரசியல் மதத்துக்கும், கடவுளுக்கும் எதிரி கிடையாது. மூடநம்பிக்கைக்கு தான் எதிரி. என்னிடம், பெரியாரும், பெருமாளும் உண்டு.

இரட்டைக்குழல் துப்பாக்கி

திராவிட இயக்கம் வலுபெறுவதற்கும், திராவிட இயக்கத்தின் நன்மைக்காகவும் ம.தி.மு.க.வும், தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்று இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ஈ.பரந்தாமன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story