குடும்பத் தகராறில் விபரீதம் 3 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று விட்டு தாய் தற்கொலை


குடும்பத் தகராறில் விபரீதம் 3 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று விட்டு தாய் தற்கொலை
x
தினத்தந்தி 23 Sep 2021 8:26 PM GMT (Updated: 23 Sep 2021 8:26 PM GMT)

வேலூரில் குடும்ப தகராறில் 3 குழந்தைகளின் கழுத்தை சேலையால் நெரித்து கொன்று விட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்,

வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 30), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ஜீவிதா (23). இவர்களுக்கு அக்சயா (5), நந்தகுமார் (4) மற்றும் பெயரிடப்படாத 6 மாத ஆண்குழந்தை என்று 3 குழந்தைகள். தினேஷ் குடும்பத்துடன் சலவன்பேட்டை கச்சேரி தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

தினேஷ் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பும்போது மதுஅருந்திவிட்டு வருவதாகவும், அதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில நேரத்தில் தினேஷ் குடிபோதையில் ஜீவிதாவை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

குழந்தைகளை கொன்று தற்கொலை

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறால் ஜீவிதா கோபித்து விட்டு 3 குழந்தைகளுடன் அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு யாரிடமும் சரியாக பேசாமல் மனவிரக்தியுடன் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று காலை மீண்டும் தனது வீட்டிற்கு வந்த ஜீவிதா தனது 3 குழந்தைகளையும் சேலையால் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப தகராறில் 3 குழந்தைகளையும் கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story