836 பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் நேர்முகத் தேர்வு முடிவு வெளியீடு


836 பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் நேர்முகத் தேர்வு முடிவு வெளியீடு
x
தினத்தந்தி 24 Sep 2021 10:12 PM GMT (Updated: 24 Sep 2021 10:12 PM GMT)

கடந்த ஆண்டு அறிவிக் கப்பட்ட 836 பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் நேர்முகத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்த 18 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

சென்னை,

ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட 26 வகையான சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத்தேர்வுகளின் அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கடந்த 2020-ம் ஆண்டு 836 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு கொரோனா காரணமாக சற்று தள்ளிவைக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள், அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வை எழுத வேண்டும்.

நேர்முகத் தேர்வு முடிவு வெளியீடு

முதன்மைத் தேர்வை பொறுத்தவரையில், கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவு கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி வெளியானது. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இறுதியாக நடத்தப்படும் நேர்முகத்தேர்வு டெல்லியில் உள்ள மத்திய பணியாளர் தேர்வாணைய (யு.பி.எஸ்.சி.) அலுவலகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 23-ந்தேதி வரை நடந்து முடிந்தது.

இந்த நிலையில் நேர்முகத்தேர்வு முடிவு நேற்று இரவு வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் பொதுப்பிரிவில் 263 பேர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 86 பேர், ஓ.பி.சி. பிரிவில் 229 பேர், எஸ்.சி. பிரிவில் 122 பேர், எஸ்.டி. பிரிவில் 61 பேர் என மொத்தம் 761 பேர் வெற்றி பெற்று பணி நியமனம் பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இவற்றில் முதல் இடத்தை சுபம் குமாரும், 2-வது மற்றும் 3-வது இடத்தை ஜக்ரதி அவஸ்தி, அங்கிதா ஜெயினும் பெற்றுள்ளனர். இதுதவிர முதல் 25 இடங்களை பெற்றவர்களில் 13 பேர் ஆண்கள், 12 பேர் பெண்கள் ஆவார்கள்.

மனிதநேயம் மையத்தில் படித்த 18 பேர் வெற்றி

இந்த 761 பேரில் சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்த 8 பெண்கள் உள்பட 18 பேர் வெற்றி பெற்று இருக்கின்றனர். அவர்களில் கோவையை சேர்ந்த வி.எஸ்.நாராயண சர்மா 33-வது இடத்தையும், தென்காசியை சேர்ந்த சண்முகவள்ளி 108-வது இடத்தையும், கோவையை சேர்ந்த சுவாதிஸ்ரீ 126-வது இடத்தையும், சென்னையை சேர்ந்த கேத்தரின் சரண்யா 157-வது இடத்தையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற இந்த மாணவர்களுக்கு மாதிரி நேர்முகத் தேர்வு பல்வேறு துறைகளை சார்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.ஏ.ஏ.எஸ்., உளவியல் பயிற்சியாளர்கள் மற்றும் பத்திரிகை துறைகளில் சிறந்த பயிற்றுனர்களை கொண்டு தினந்தோறும் இணையதளம் வாயிலாக இலவசமாக நடத்தப்பட்டது. மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கான பயணப்படியும் வழங்கப்பட்டது. இந்த அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்பட்டதாக மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்தார்.

மேலும், மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்து வெற்றி பெற்ற 18 பேருக்கும், சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story