சாதிவாரி கணக்கெடுப்பை கண்டிப்பாக நடத்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ்


சாதிவாரி கணக்கெடுப்பை கண்டிப்பாக நடத்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
x
தினத்தந்தி 26 Sep 2021 7:18 PM GMT (Updated: 26 Sep 2021 7:18 PM GMT)

சாதிவாரி கணக்கெடுப்பை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

மத்திய அரசின் நிலைப்பாடு

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும், அத்தகைய கணக்கெடுப்புகளின் மூலம் துல்லியமான விவரங்களை திரட்ட முடியாது என்றும் மத்திய அரசு கூறியிருக்கிறது. அதுமட்டுமின்றி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில்லை என்று 1951-ம் ஆண்டே கொள்கை முடிவு எடுக்கப்பட்டு விட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு காலத்துக்கு சற்றும் பொருந்தாதது ஆகும். 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த ஆணையிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மராட்டிய அரசு தொடர்ந்துள்ள வழக்கில், மத்திய அரசின் சமூகநீதித் துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் இந்த நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கணக்கெடுப்பு அவசியம்

சாதியற்ற சமுதாயம் அமைக்க பாடுபடும் சூழலில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வேண்டாம் என்று மத்திய அரசு தரப்பில் முன்வைக்கப்படும் காரணம் புரியாமையையே காட்டுகிறது. சாதிகள் திடீரென்று உருவாகிவிடவில்லை. காலம்காலமாக மக்கள் செய்யும் தொழில்கள், பாகுபாடுகள் காரணமாகவே சாதிகள் உருவாயின. ஏற்றத்தாழ்வுகளையும், சாதி சார்ந்து தொழில் செய்யும் முறையையும் ஒழித்து சமத்துவமான சமுதாயம் அமைத்தால்தான் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். அதற்கு அனைத்து சமூகங்களும் முன்னேற வேண்டும். அதற்கான அடிப்படை, இடஒதுக்கீடு என்பதால், அதை உறுதி செய்ய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
அறிவியலும், தொழில்நுட்பமும் வளராத, கையடக்க கால்குலேட்டர் கண்டுபிடிக்கப்படாத காலத்திலேயே ஆங்கிலேயர்கள் இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். அக்கணக்கெடுப்பு விவரங்கள் 99 சதவீதம் துல்லியமாக உள்ளன. அவற்றின் அடிப்படையில்தான் இந்தியாவில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

நடைமுறைச் சிக்கல்களை...

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது என்பதற்கு மத்திய அரசு கூறும் இன்னொரு காரணம், மத்திய அரசின் ஓ.பி.சி. பட்டியலும், மாநிலங்களின் ஓ.பி.சி. பட்டியலும் வேறுவேறாக உள்ளன என்பதுதான். மத்திய அரசின் ஓ.பி.சி. பட்டியலின்படி சாதி விவரங்கள் திரட்டப்பட்டால்கூட, அவற்றை மாநிலங்களின் தேவைக்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொள்ள முடியும். அதனால் அது ஒரு சிக்கலல்ல. தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய். இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தவிர்க்கமுடியாத தேவை இருக்கிறது. அதைக் கருத்தில்கொண்டு கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்தால், அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் அனைத்தையும் எளிதில் களைய முடியும். அதனால் 2021 கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக மத்திய அரசு நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story