தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 26 Sep 2021 11:58 PM GMT (Updated: 26 Sep 2021 11:58 PM GMT)

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பெய்து வருகிறது. அந்தவகையில் வங்கக்கடலில் உருவான ‘குலாப்’ புயல் காரணமாக சில இடங்களில் கனமழையும் பெய்திருக்கிறது. இந்தநிலையில்வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ‘குலாப்’ புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் கரையை கடந்து இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவகாற்று காரணமாகவும், புயல் கடந்த வெப்பநிலை காரணமாகவும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மிக கனமழையும், தென்காசி, குமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை) நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story