தமிழகத்தில் 13 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு; தலைமை செயலாளர்


தமிழகத்தில் 13 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு; தலைமை செயலாளர்
x
தினத்தந்தி 28 Sep 2021 6:39 AM GMT (Updated: 28 Sep 2021 6:59 AM GMT)

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது என தலைமை செயலாளர் இறையன்பு கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், மக்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  தடுப்பூசி குறித்து அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தமிழக அரசு மெகா தடுப்பூசி முகாம்களை அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த 12ந்தேதி நடந்த தடுப்பூசி முகாமில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும், கடந்த 19ந்தேதி 16 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் , கடந்த 26ந்தேதி 24 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், தேனி, கோவை, திண்டுக்கல், திருச்சி, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி மிகச்சிறப்பாக உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.

விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தருமபுரி, கடலூர், அரியலூர், வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு உள்ளதாக கூறியுள்ளார். தடுப்பூசி செலுத்தும் பணியில் பின்தங்கிய மாவட்டங்கள் அதிக கவனம் செலுத்தவும் பின் தங்கியுள்ள மாவட்டங்கள் தடுப்பூசி செலுத்தும் பணியை இருமடங்காக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story