"தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு"- வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய இயக்குநர் முனைவர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
''தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, இன்று அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும்.
தென் மாவட்டங்கள், டெல்டா (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும்.
வடகிழக்கு பருவமழை குறித்து இன்னும் ஓரிரு நாளில் தகவல் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story