அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா ; விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா ;  விஸ்வரூபம் எடுக்கும்  விவகாரம்
x
தினத்தந்தி 21 Oct 2021 11:10 AM GMT (Updated: 21 Oct 2021 11:10 AM GMT)

அ.தி.மு.க. தரப்பில் சசிகலா மீது புகார் அளித்துள்ள நிலையில் சசிகலா ஆதரவாளர்கள் அவரை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு வருகிறார்கள்.

சென்னை:

 பெங்களூரு சிறையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் சசிகலா விடுதலை ஆனார். அப்போது அ.தி.மு.க. கொடி கட்டிய காரில் அவர் வந்தார். அதன்பிறகு சசிகலா எங்கு வெளியில் சென்றாலும் அவரது காரில் அ.தி.மு.க. கொடி தவறாமல் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக தெரிவித்த சசிகலா தேர்தலுக்கு பின்னர் தனது நடவடிக்கைகள் மூலம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதை அடுத்து பொன்விழா கொண்டாட்டங்களில் அ.தி.மு.க.வினர் ஈடுபட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. சார்பில் பிரமாண்டமாக பொன்விழா மாநாடு நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சசிகலாவும் பொன்விழாவையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று கூறிக்கொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.

பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த வாரம் சசிகலா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஜெயலலிதா நினைவிடத்திற்கு நேரில் சென்று கண்ணீர் மல்க மரியாதை செலுத்திய அவர், அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நிச்சயம் காப்பாற்றுவார்கள் என்று கூறினார்.

இதன்பிறகு தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லம், ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டம் ஆகிய இடங்களுக்கு சென்ற சசிகலா அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா என்ற பெயரில் கல்வெட்யும் திறந்து வைத்தார். இது கட்சிக்குள் கூடுதல் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சசிகலா மீது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாம்பலம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று கூறி வரும் சசிகலா மீது 3 சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. உறுப்பினராக கூட இல்லாத சசிகலாவின் செயல்பாடுகளால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சசிகலா பொதுச்செயலாளர் என்று கூறுவதை தடுத்து நிறுத்தும் வகையில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 419, 153ஏ, 505(பி) ஆகிய 3 சட்டப்பிரிவுகளில் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயக்குமார் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த புகார் மனு தொடர்பாக நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதையடுத்து சசிகலா மீது வழக்கு பாயுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. தரப்பில் இதுபோன்று சசிகலா மீது புகார் அளித்துள்ள நிலையில் சசிகலா ஆதரவாளர்கள் அவரை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு வருகிறார்கள்.

அ.தி.மு.க. சட்டவிதிகளின்படி பொதுச்செயலாளருக்கு மட்டுமே பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் உண்டு. பொதுக்குழுவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட விவகாரம் இன்னமும் கோர்ட் டில் நிலுவையில் உள்ளது. தற்போது வரை அவர்தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று கூறி வருகிறார்கள்.

இதன்மூலம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தனக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் புகார் அளித்துள்ளது தொடர்பாக சசிகலா எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார்? என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து அ.தி.மு.க. புகாரை சட்டரீதியாக எதிர்கொள்வது பற்றி சசிகலா தரப்பில் தீவிரமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் அ.தி.மு.க. வட்டாரத்திலும், அரசியல் களத்திலும் புதிய பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story