பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும்,நலம் விசாரித்த நண்பர்களுக்கும் நன்றி - ரஜினிகாந்த்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்பு நலமுடன் இருப்பதாக ஆடியோ வெளியிட்டுள்ளார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்துக்கு கடந்த 28-ந் தேதி திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. தலைவலி மற்றும் லேசான மயக்கம் காரணமாக அவர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் சிறிய அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
அதனைத்தொடர்ந்து சிகிச்சை மூலம் அந்த அடைப்பு சரிசெய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் ஆஸ்பத்திரியிலேயே நடிகர் ரஜினிகாந்த் ஓய்வு எடுத்து வந்தார். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவரை, அவரது மனைவி லதா மற்றும் குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வந்தனர்.
இந்தநிலையில் உடல்நிலை தேறியதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு வீடு திரும்பினார். முக கவசம் அணிந்தவாறு சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்திற்கு காரில் ரஜினிகாந்த் வந்தார். அப்போது மழை பெய்ததால் உதவியாளர் ஒருவர் குடை பிடித்தபடி ரஜினிகாந்தை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
வீட்டின் வாசலில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றார். அங்கு கூடியிருந்த ரசிகர்களை பார்த்து ரஜினிகாந்த் கையசைத்தவாறு வீட்டிற்குள் சென்றார். அப்போது ரஜினியின் மகள்கள், பேரன்கள் மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர்.
இந்நிலையில் தாம் நலமுடன் இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ பதிவு வெளியிட்டுள்ளார் .
தனது ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி , தனது நலன் பற்றி விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி என அவர் அந்த ஆடியோ பதிவில் தெரிவித்துள்ளார் .
Related Tags :
Next Story