குழந்தைகள் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று சொல்வதா? ஜக்கி வாசுதேவ் கண்டனம்


குழந்தைகள் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று சொல்வதா? ஜக்கி வாசுதேவ் கண்டனம்
x
தினத்தந்தி 3 Nov 2021 10:58 PM GMT (Updated: 3 Nov 2021 10:58 PM GMT)

சுற்றுச்சூழல் மீது திடீர் அக்கறை காட்டுபவர்கள் குழந்தைகள் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று சொல்வதா? ஜக்கி வாசுதேவ் கண்டனம்.

சென்னை,

தீபாவளி பண்டிகையையொட்டி ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘குழந்தைகளுக்கு பட்டாசுகள் அளித்திடும் சந்தோஷத்தை மறுக்க காற்றுமாசு ஒரு காரணமல்ல. குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழட்டும்’ என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஜக்கி வாசுதேவ் கூறியிருப்பதாவது:-

‘நான் பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் நான் சிறுவனாக இருந்தபோது பட்டாசு வெடிப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு செயலாக இருந்தது. நாங்கள் செப்டம்பர் மாதத்தில் இருந்தே பட்டாசுகள் பற்றி கனவு காண தொடங்கிவிடுவோம். தீபாவளி பண்டிகை முடிந்தபிறகும் ஓரிரு மாதங்களுக்கு அந்த பட்டாசுகளை பத்திரப்படுத்தி தினமும் வெடித்து மகிழ்வோம். ஆனால் இப்போது என்னவென்றால் சுற்றுச்சூழல் மீது திடீர் அக்கறை காட்டும் சிலர், குழந்தைகள் பட்டாசு வெடிக்கக்கூடாது என கூறுகிறார்கள். இது சரியல்ல.யாரெல்லாம் காற்று மாசுபாடு குறித்து கவலைகொள்கிறீர்களோ அவர்கள் பட்டாசு வெடிக்கும் ஆனந்தத்தை தியாகம் செய்துவிடுங்கள். வேண்டுமென்றால், பெரியவர்கள் பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்திவிடுங்கள். ஆனால், குழந்தைகள் பட்டாசுகள் வெடித்து ஆனந்தமாக இருக்கட்டும். அவர்களுக்காக நீங்கள் உங்கள் அலுவலகங்களுக்கு 3 நாட்கள் வாகனங்களில் செல்வதற்குப் பதிலாக நடந்துசெல்லுங்கள்.இந்த தீபாவளி திருநாளில், உங்கள் மனிதத்தன்மையை அதன் முழுச்சிறப்புடன் ஒளிரச்செய்திடுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story