ஆசிரியர் பாலியல் தொல்லை; பிளஸ்-2 மாணவி தற்கொலை


ஆசிரியர் பாலியல் தொல்லை; பிளஸ்-2 மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 12 Nov 2021 8:21 PM GMT (Updated: 12 Nov 2021 8:21 PM GMT)

கோவையில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

கோவை,

கோவை உக்கடத்தை சேர்ந்த 17 வயது மாணவி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்றுமுன்தினம் மாணவியின் பெற்றோர் மற்றும் தங்கை வெளியே சென்றிருந்தனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவி திடீரென வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மாணவியின் தற்கொலைக்கு, அவர் முன்பு படித்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துதான் காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து மகளிர் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில், மாணவி கடந்த ஆண்டு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துள்ளார்.

பள்ளி நிர்வாகத்திடம் புகார்

அப்போது, ஆன்லைன் வகுப்பில் மாணவியிடம் இயற்பியல் ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தி (வயது 35) என்பவர் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதை மாணவி பயத்தின் காரணமாக வெளியே சொல்ல வில்லை. பின்னர் நேரடி வகுப்பு தொடங்கியதும், ஆசிரியரின் பாலியல் தொல்லை அதிகரித்தது. இதையடுத்து மாணவி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் மாணவியை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

போக்சோவில் வழக்கு

இந்த நிலையில் மாணவி, பெற்றோரிடம் தனக்கு பள்ளி பிடிக்கவில்லை என்று கூறி அந்த பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் வாங்கினார். தொடர்ந்து அந்த மாணவி அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சேர்ந்து பிளஸ்-2 படிப்பை தொடர்ந்தார். ஆனாலும், ஆசிரியர் மிதுன்சக்ரவர்த்தியின் பாலியல் தொந்தரவு தொடர்ந்தது.

இதனால் மனவேதனையடைந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து மிதுன்சக்கரவர்த்தி மீது போலீசார் தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

உறவினர்கள் போராட்டம்

இதற்கிடையே மாணவியின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவி எழுதிய கடிதம் சிக்கியது

இதற்கிடையே மாணவியின் வீட்டில் அவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் மாணவி இதற்கு முன்பு வசித்து வந்த வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த முதியவர் ஒருவரின் பெயர், பள்ளி தோழியின் தந்தை மற்றும் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பெயரை குறிப்பிட்டு இவர்களை சும்மா விடக்கூடாது என்று குறிப்பிட்டு உள்ளார்.

அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் மாணவிக்கு பிற 2 பேரும் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்களா? அவர்கள் யார்? என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story