எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை பற்றி கவலைப்படுவதில்லை - மு.க ஸ்டாலின்


எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை பற்றி கவலைப்படுவதில்லை -  மு.க  ஸ்டாலின்
x
தினத்தந்தி 14 Nov 2021 9:10 AM GMT (Updated: 14 Nov 2021 9:10 AM GMT)

கொளத்தூர் பகுதியில் நலத்திட்ட உதவிகளை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று வழங்கினார்.

சென்னை,

சென்னை கொளத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது மழை நீர் வடிகால் அமைத்ததில் நடந்த முறைகேடுகளை விசாரணை கமி‌ஷன் அமைத்து கண்டுபிடிப்போம் என்று அறிவித்தார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதே, அங்கு நேரில் பார்வையிட செல்வீர்களா?

பதில்:- கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட நாளை (திங்கட்கிழமை) செல்லலாம் என முடிவு செய்துள்ளேன்.

கேள்வி:- மழைசேத விவரம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுத வாய்ப்புள்ளதா? எவ்வளவு பயிர்சேதம் ஏற்பட்டுள்ளது?

பதில்:- மொத்த சேத கணக்கு வந்தபிறகுதான் அதை தயார் செய்து பிரதமருக்கு அனுப்பி வைப்போம். தேவைப்பட்டால் இங்கு இருக்கிற அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமரிடம் நேரடியாக சென்று கோரிக்கைகளை வைக்க திட்டமிட்டுள்ளோம்.

கேள்வி:- புளியந்தோப்பு, பட்டாளம் பகுதிகளில் இன்னும் மழைநீர் தேங்கி உள்ளதே?

பதில்:- மழைநீர் தேங்கியது உண்மைதான். ஆனால் விரைவாக மழை நீரை அப்புறப்படுத்தி இருக்கிறோம்.

கேள்வி:- எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- நான் அதைப்பற்றி கவலைப்படுவது கிடையாது. என்னுடைய வேலை மக்களுக்கு பணியாற்றுவது. ஓட்டு போட்டவர்கள் மட்டுமல்ல, ஓட்டுபோடாத மக்களுக்கும் சேர்த்து வேலை செய்வதுதான் எனது கொள்கை. அந்த வழியில் எங்களது பயணம் இருக்கும்.

எதிர்க்கட்சிகள் என்ன புகார் செய்தாலும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்கள் செய்த அக்கிரமத்தை, அநியாயத்தை மழை முடிந்த பிறகு அதற்கென்று விசாரணை கமி‌ஷன் வைக்கப்பட்டு எங்கெங்கு தவறுகள் நடந்துள்ளது என்பதை கண்டறிந்து யார் குற்றவாளிகளோ, அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story