அழகு நிலையம் நடத்திய கும்பலிடம் சிக்கிய அப்பாவி மாணவிகள்-இளம்பெண்கள்


அழகு நிலையம் நடத்திய கும்பலிடம் சிக்கிய அப்பாவி மாணவிகள்-இளம்பெண்கள்
x
தினத்தந்தி 17 Nov 2021 6:28 AM GMT (Updated: 17 Nov 2021 6:28 AM GMT)

காரைக்குடியில் பள்ளி மாணவியை பலாத்கார வழக்கு விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அழகு நிலையம் நடத்திய கும்பலிடம் பல அப்பாவி மாணவிகள், இளம்பெண்கள் சிக்கிய திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார், அந்த 17 வயது மாணவி. இவருடன் ஒரே வகுப்பில் படித்து வந்த தோழியின் பிறந்தநாளையொட்டி அவரது அழைப்பை ஏற்று, அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு தோழியின் ஆண் நண்பர் சென்னையைச் சேர்ந்த ஹாரீஸ் (வயது 30) என்பவர் அங்கிருந்துள்ளார்.

அதன் பின்னர் ஹாரீஸ் வற்புறுத்தலுக்கு இணங்க அவர்கள் 3 பேரும் மது அருந்தி, சிகரெட் புகைத்ததாகவும்,. சிறிது நேரம் கழித்து தோழியின் தாயான அழகு நிலைய ஊழியர் லெட்சுமி (38) அங்கு வந்துள்ளார். அவர் அந்த பிளஸ்-2 மாணவியிடம், எனது மகளுக்கு புருவத்தை அழகு செய்ய உள்ளேன். நீயும் வா என அழைத்துள்ளார்.

இதையடுத்து மாணவி, அவருடைய தோழி, அவரது தாய் லெட்சுமி ஆகியோர் அந்த அழகு நிலையத்திற்கு சென்றனர். அங்கு அழகு நிலைய பொறுப்பாளர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மன்சில் (வயது 35) என்பவரை மாணவிக்கு அறிமுகப்படுத்தினர்.

அதன்பின் எனது வீட்டிற்கு மதிய விருந்திற்கு வரவேண்டும் என அழைத்தார். இதையடுத்து மாணவி, அவரது தோழியுடன் மன்சில் வீட்டிற்கு சென்றார். அங்கு மன்சிலிடம் வேலை பார்த்து வரும் விக்னேஷ், சிரஞ்சீவி, தோழியின் தாயார் லெட்சுமி ஆகியோரும் இருந்துள்ளனர்.

பின்னர் மதியம் மதுபாட்டில்களை வாங்கி வந்து, அதை அனைவரும் குடித்ததாக கூறப்படுகிறது. விருந்தும் நடைபெற்றது. அனைவரும் வீட்டின் அறையில் இருந்த போது, மன்சில் அந்த மாணவியை தனது படுக்கை அறைக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

அதன் பின்னர் மாணவியை அவரது வீட்டிற்கு கொண்டு சென்று விட்டனர். சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவி இரவு நேரத்தில் படிக்க செல்வதாக கூறிவிட்டு தனது தோழியின் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மாணவியை மன்சில், லெட்சுமி, விக்னேஷ் (28), அறந்தாங்கியை சேர்ந்த சிரஞ்சீவி (31) ஆகியோர்அழைத்து சென்றுள்ளனர். ஒரு தியேட்டருக்கு சென்று சினிமா பார்த்ததுடன், அங்கு ஆடி, பாடி அதை வீடியோவும் எடுத்துக்கொண்டனர்.

சில நாட்கள் கழித்து விடுமுறைதானே என்று கூறி தனது வீட்டிற்கு வா என்று மாணவியை மன்சில் அழைத்துள்ளார். அப்போதும் விருந்து உபசாரம் நடத்தி மாணவியை மன்சில் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு மற்ற அனைவரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவி பள்ளிக்கு சரிவர வரவில்லை என்று அந்த பள்ளியில் இருந்து மாணவியின் தந்தைக்கு புகார் சென்றது. அதன்பேரில் அவர் மாணவியை அழைத்து கண்டித்து விசாரித்தபோதுதான் இந்த விவரங்கள் வெளியே வந்தன.

இதுகுறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரின் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு நடத்திய விசாரணையில் மேற்கண்ட திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்ததால், விக்னேஷ், சிரஞ்சீவி, லெட்சுமி, அவருடைய 17 வயது மகள் என 4 பேரை கைது செய்தனர்.

இந்த கும்பல், இதேபோல் அப்பாவி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை குறி வைத்து பாலியல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சிக்கிய செல்போன்களில் அதுசம்பந்தமான ஆபாச காட்சிகள், ஆடல், பாடல்கள், குடித்து விட்டு கும்மாளம் போடும் காட்சிகள் உள்ளிட்ட காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அதில் சம்பந்தப்பட்டவர்கள் யார், யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமறைவான மன்சில், சென்னையைச் சேர்ந்த ஹாரீஸ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட பள்ளியில் இருந்து பிரச்சினைக்கு காரணமான மாணவியின் வகுப்பு தோழியை நீக்கிவிட்டதாகவும், பாதிக்கப்பட்ட மாணவியின் மாற்று சான்றிதழை அவருடைய பெற்றோரே வாங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் சமூகநல அமைப்புகளைச் சேர்ந்த சிலர், காரைக்குடி பகுதியில் இளம்பெண்கள், பள்ளி மாணவிகளை குறிவைத்து அவர்களை வசியப்படுத்தி அவர்களிடம் இருந்து ஒரு கும்பல் கரு முட்டைகளை திருடுகிறது என்று புகார் தெரிவித்துள்ளனர். அதற்கு போலீஸ் அதிகாரிகளும், மருத்துவர்களும் இந்த சம்பவத்தில் அதற்கான வாய்ப்பு குறைவே என்று கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் அதுகுறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காரைக்குடியில் தொடர்ந்து பல்வேறு வதந்திகள் பரவி வருவதால். வதந்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.

Next Story