பழங்குடியின பெண்கள் 4 பேர் பாதிப்பு: 10 ஆண்டுகள் ஆகியும் விசாரணை தொடங்காத பலாத்கார வழக்கு


பழங்குடியின பெண்கள் 4 பேர் பாதிப்பு: 10 ஆண்டுகள் ஆகியும் விசாரணை தொடங்காத பலாத்கார வழக்கு
x
தினத்தந்தி 22 Nov 2021 11:19 PM GMT (Updated: 22 Nov 2021 11:19 PM GMT)

பழங்குடியின பெண்களை 5 போலீசார் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 10 ஆண்டுகள் ஆகியும் விசாரணை தொடங்கப்படாமல் உள்ளது. குற்றம்சாட்டப்பட்ட போலீசாரை காப்பாற்ற முயற்சிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

சென்னை,

விழுப்புரம் மாவட்டம், திருகோவிலூர் தாலுகா டி.மண்டபம் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண்கள் 4 பேரை திருட்டு வழக்கு விசாரணைக்காக கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 22-ந் தேதி அழைத்து சென்ற போலீசார் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.சீனிவாசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன், போலீஸ்காரர்கள் ஆர்.தனசேகரன், ஆர்.பக்தவச்சலம், கார்த்திகேயன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பின்னடைவு

இந்த வழக்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இருந்தபோதிலும் இதுவரை அந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையுடன் சேர்த்து ஜாமீன் தொடர்பான உத்தரவு நகல்கள் தாக்கல் செய்யப்படாததால் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் ஆகியும் முறையான ஆவணங்களை போலீசார் இதுவரை கோர்ட்டில் தாக்கல் செய்யாதது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட முக்கியமான இந்த வழக்கில் விசாரணை அதிகாரி, தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யாமல் இருப்பது வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் செயல்படுகின்றனரோ என்ற பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.

நிவாரணத்தை மறுத்த பெண்கள்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இருந்து வரும் தமிழ்நாடு பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த பி.வி.ரமேஷ் என்பவர் கூறியதாவது:-

பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு, அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதற்கட்ட நிவாரணம் வழங்குவதாக அறிவித்த போது அதை ஏற்க மறுத்து, நீதி கிடைக்கும் வரை நிவாரணம் பெற மாட்டோம் என்பதில் அந்த பெண்கள் உறுதியாக இருந்தனர்.

இந்த வழக்கில் குறிப்பிட்ட காலத்தில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி குற்றம் சாட்டப்பட்ட போலீசாரின் பணி இடைநீக்கத்தை ஐகோர்ட்டு ரத்து செய்தது. இதன் காரணமாக குற்றம் சாட்டப்பட்ட போலீசார், வெவ்வேறு மாவட்டங்களில் பணியில் இருந்து வருகின்றனர். இந்த புகாரை திரும்ப பெற வைப்பதற்கான முயற்சியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீசாரில் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு ஈடுபட்டார். தேவையான ஆவணங்களை தாக்கல் செய்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் பட்சத்தில் தான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீதியை நிலைநாட்ட வேண்டும்

திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு கூறும்போது, ‘குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனால், விசாரணைக்காக குற்றப்பத்திரிகை ஏற்கப்படவில்லை. ஜாமீன் தொடர்பான உத்தரவு நகல்கள் காணாமல் போனதால் குற்றப்பத்திரிகையை கோர்ட்டு ஏற்கவில்லை' என்றார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஆஜராகி வரும் வக்கீல் பிரீதா ஞானமணி கூறும்போது, ‘குற்றப்பத்திரிகையில் உரிய திருத்தம் மேற்கொண்டு மீண்டும் தாக்கல் செய்யப்படாததால் வழக்கு எண் வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு, திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டருக்கு கடந்த ஜூலை மாதம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

ஜாமீன் தொடர்பான உத்தரவு நகல்கள் காணாமல் போய் இருந்தால் அதனை பெற்று சில நாட்களில் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கலாம். ஒவ்வொரு முறையும் கோர்ட்டு அதனை நினைவுபடுத்தாது. போலீசார் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும்' என்றார்.

10 ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கில் கோர்ட்டு விசாரணை தொடங்கப்படாமல் இருப்பது விசாரணையை தோற்கடிக்கும் நோக்கில் விசாரணை அதிகாரிகள் செயல்படுவதையே காட்டுகிறது என்று குற்றம்சாட்டும் சமூக ஆர்வலர்கள், நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Next Story