கோவை மாநாட்டில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து தமிழகத்தில் ரூ.52 ஆயிரம் கோடி முதலீடு


கோவை மாநாட்டில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து தமிழகத்தில் ரூ.52 ஆயிரம் கோடி முதலீடு
x
தினத்தந்தி 24 Nov 2021 12:27 AM GMT (Updated: 24 Nov 2021 12:27 AM GMT)

கோவை முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் ைகயெழுத்தானது. ரூ.52 ஆயிரத்து 549 கோடி முதலீட்டின் மூலம் 92 ஆயிரத்து 420 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

கோவை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதலீட்டாளர்கள் மாநாடு

தமிழக அரசின் தொழில் துறை சார்பில், “முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு” என்ற பெயரிலான முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் மூலம் மொத்தம் 82 திட்டங்கள் ரூ.52 ஆயிரத்து 549 கோடியில் புதிதாக வர இருக்கின்றன. இதன் மூலம் 92 ஆயிரத்து 420 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

மாநாட்டில், ரூ.34 ஆயிரத்து 723 கோடி முதலீட்டில் 74 ஆயிரத்து 835 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடும் வகையில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.

அதன்படி, சென்னை, கோவை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விருதுநகர், கிருஷ்ணகிரி, கரூர், தூத்துக்குடி, ராணிப்பேட்டை, தர்மபுரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தகவல் தரவு மையம், மின் வாகனங்கள் தயாரிப்பு, சிமெண்டு உற்பத்தி, தொழிற் பூங்கா, காற்றாலை, ஜவுளிப்பூங்கா, நூற்பு ஆலைகள் உள்பட பல தொழில் நிறுவனங்கள் அமைய உள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

மேலும், ரூ.485 கோடி முதலீடு மற்றும் 1,960 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 7 வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் உதிரி பாகங்கள் உற்பத்தி மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.

அதன்படி, கோவை, காஞ்சீபுரம், ஓசூர், சேலம், திருச்சி ஆகிய இடங்களில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் அமைய இருக்கின்றன.

மொத்தம் ரூ.35 ஆயிரத்து 208 கோடி முதலீட்டில் 76 ஆயிரத்து 795 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தொழில் நிறுவனங்களின் கையேடு

டிட்கோ நிறுவனம் தயாரித்துள்ள மாநிலத்தில் உள்ள வான்வெளி மற்றும் பாதுகாப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களின் கையேடு ஒன்றினையும் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் துறைகளுக்கான உற்பத்தியை மேம்படுத்த ஒரு திறன்மிகு மையத்தினை டிட்கோ நிறுவனம், டசோ சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நிறுவ உள்ளது. ரூ.212 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள, இத்திறன்மிகு மையம், பொருள் வடிவமைப்பு, உற்பத்தி மேம்பாடு, புரோட்டோ டைப்பிங், திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு போன்ற செயல் திறன்களை வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழிலகங்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் வழங்கும்.

மேலும், இதன் மூலமாக, தமிழகத்தில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் துறையில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதுடன், ஏற்கனவே இயங்கிவரும் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கும் பணியாளர்களின் செயல்திறனை மேம்படுத்த பயனுள்ளதாக இருக்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பரிமாற்றப்பட்டது.

13 புதிய திட்டங்கள்

இதேபோல், ரூ.13 ஆயிரத்து 413 கோடி முதலீட்டில் 11 ஆயிரத்து 681 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 13 புதிய திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்கள், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, நாமக்கல், விருதுநகர், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் அமைய இருக்கின்றன.

மேலும், ரூ.3 ஆயிரத்து 928 கோடி முதலீட்டில் 3,944 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 10 திட்டங்களின் வணிக உற்பத்தியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த 82 திட்டங்களின் மூலம் ரூ.52 ஆயிரத்து 549 கோடி முதலீட்டில் 92 ஆயிரத்து 420 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிட வகை செய்யப்பட்டுள்ளது.

நிதி நுட்பக் கொள்கை வெளியீடு

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 22 மாவட்டங்களில் முதலீடுகள் பரவலாக மேற்கொள்ளப்பட உள்ளன.

மாநாட்டில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை -2021-ஐ வெளியிட்டார். மேலும், சென்னையில் நிதி நுட்ப நகரம் 2-ம் மற்றும் 3-ம் அடுக்கு நகரங்களில், நியோ டைடல் தொழில் நுட்ப பூங்காக்கள் அமைத்தல் போன்ற பல சிறப்பம்சங்கள் இக்கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

கைபேசி செயலி

இதேபோல், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேம்படுத்தப்பட்ட ஒற்றை சாளர இணைய தளம் 2.0 வின் கைபேசி செயலியைத் தொடங்கிவைத்தார். தற்போதுள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில், இக்கைபேசி செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் மேற்கொள்ளுதல், அனுமதிகள் பற்றிய தகவல்கள், அனுமதிகளின் நிலைதனைக் கண்காணித்தல், தெளிவுகள் மற்றும் சந்தேகங்கள் எழுப்புதல் போன்ற சிறப்பம்சங்கள் இந்தச் செயலியில் இடம் பெற்றுள்ளன.

மேலும், கொடிசியா அமைப்பின் பொன்விழா நிறைவையொட்டி, காலப்பேழை புத்தகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

பங்கேற்றவர்கள்

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன், பண்ணாரியம்மன் குழுமத்தின் தலைவர் எஸ்.வி.பாலசுப்ரமணியம், ஜி.ஆர்.ஜி. நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிறுவன அறங்காவலர் நந்தினி ரங்கசாமி, டைசெல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் யோஷிபூமி டகாசே, கொடிசியாவின் தலைவர் ரமேஷ் பாபு மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story