தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மித அளவிலான மழை தொடர வாய்ப்பு


தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மித அளவிலான மழை தொடர வாய்ப்பு
x
தினத்தந்தி 31 Dec 2021 2:56 AM GMT (Updated: 31 Dec 2021 2:56 AM GMT)

சென்னையை தவிர 14 மாவட்டங்களில் இன்று மித அளவிலான மழை தொடர வாய்ப்பு உள்ளது.



சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.  நடப்பு ஆண்டில் அதிக அளவு மழை பதிவாகி இருந்தது.  இந்த நிலையில், சென்னையில் நேற்று நண்பகலில் திடீரென சாரல் மழை பெய்தது.  இதன்பின்னர், நாள் முழுவதும் கனமழை பெய்தது.  பல்வேறு கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.

இந்த நிலையில், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கனமழை எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  4 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டு உள்ளார்.

இந்த நிலையில், சென்னையை தவிர, செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் உள்பட 14 மாவட்டங்களில் இன்று மித அளவிலான மழை தொடர வாய்ப்பு உள்ளது.  இவற்றில் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய கூடும்.

இதேபோன்று, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மணிநேரத்திற்கு மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story