கொரோனா விவகாரத்தில் பொதுமக்களை அச்சுறுத்த கூடாது; எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி


கொரோனா விவகாரத்தில் பொதுமக்களை அச்சுறுத்த கூடாது; எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி
x
தினத்தந்தி 14 Jan 2022 12:37 AM GMT (Updated: 14 Jan 2022 12:37 AM GMT)

கொரோனா பாதிப்பு விவகாரத்தில் பொதுமக்களை அச்சுறுத்த கூடாது என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

கொரோனா பாதிப்பு விவகாரம் பற்றி எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், மூன்றாம் அலை அதிக அளவில் இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறியது.  இதனை அரசு கவனத்தில் வைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. 

இதனால் தமிழகம், மூன்றாம் அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், மிதமான நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள், ஆக்சிஜன் அளவு 92க்கு மேல் உள்ளவர்கள், அவரவர் வீடுகளில், 6 அல்லது 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தொற்று ஏற்பட்டவர்களில், 85 சதவீதத்தினருக்கு ஒமைக்ரான் பாதிப்பும், 15 சதவீதம் பேருக்கு டெல்டா தொற்றும் ஏற்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், நேற்று முன்தினம் மாலை சுகாதார துறை அறிக்கை, 800 பேர் தான் ஒமைக்ரான் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

இதில் அமைச்சர் பேட்டி உண்மையா? சுகாதார துறை அறிக்கை உண்மையா? பாதித்தவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டுமா? அல்லது வீட்டிலேயே இருக்க வேண்டுமா? வீட்டில் தனிமைப்படுத்த முடியாதவர்கள் எங்கு செல்ல வேண்டும் என தமிழக மக்கள் புரியாமல் தவிக்கின்றனர்.  தொற்று அதிகமாக பரவி வரும் சூழ்நிலையில் ஊரடங்குக்கு அவசியமில்லை.

ஒமைக்ரான் பரிசோதனை மையம் மாநிலத்தில் இல்லை.  ஆக்சிஜன் அளவு 92க்கு கீழ் சென்றால் மட்டுமே, மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என அமைச்சர் அறிக்கை வெளியிட கூடாது. ஒவ்வொரு வார்த்தைக்கும் தான் பொறுப்பு என்ற உணர்வுடன், அமைச்சர் நடந்து கொள்ள வேண்டும். மக்களை அச்சுறுத்த கூடாது.

அதேசமயம் உண்மையான பாதிப்புகளை மறைக்காமல், மக்களிடம் தெரிவிக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உண்டு.  தொற்று ஏற்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளித்து குணப்படுத்துவது, அரசின் தலையாய கடமை என உணர்ந்து செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.




Next Story