தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைவு


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைவு
x
தினத்தந்தி 16 Jan 2022 1:45 PM GMT (Updated: 16 Jan 2022 1:45 PM GMT)

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புடன் 1.42 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னை,

2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாறி பல வகையில் மக்களை பாதித்து வருகிறது. அந்தவகையில் ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

தென்ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றுக்கு ஒமைக்ரான் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இது காட்டுத்தீ போல உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் 3-வது அலையை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவல் வேகம் எடுத்துள்ளது. தினசரி பாதிப்பு கடந்த இரு வாரங்களாக ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்றை விட சற்று சரிந்துள்ளது.  தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- 

தமிழகத்தில் மேலும் 23,975- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 29  லட்சத்து 39 ஆயிரத்து 923- ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 12,484- ஆக உள்ளது.

 கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய  ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 720 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1.42 லட்சமாக உள்ளது.  சென்னையில்  மேலும்  8,987- கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 23,989- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. 


Next Story