துபாயில் இருந்து விமானத்தில் சென்னை வந்தபோது நடுவானில் பயணி திடீர் சாவு


துபாயில் இருந்து விமானத்தில் சென்னை வந்தபோது நடுவானில் பயணி திடீர் சாவு
x
தினத்தந்தி 19 Jan 2022 7:08 PM GMT (Updated: 19 Jan 2022 7:08 PM GMT)

துபாயில் இருந்து விமானத்தில் சென்னை வந்தபோது நடுவானில் பயணி திடீர் சாவு.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து நேற்று அதிகாலையில் விமானம் வந்து கொண்டு இருந்தது. விமானம் சென்னையை நெருங்கியபோது அதில் பயணம் செய்த நாகப்பட்டினம் நாகூரைச் சோ்ந்த பஷீா் (வயது 47) என்பவா் திடீரென நெஞ்சுவலியால் துடித்தாா்.

அவருக்கு அவசர முதலுதவி சிகிச்சை அளித்த விமான பணிப்பெண்கள், இதுபற்றி விமானிக்கு தகவல் கொடுத்தனா். அவர், உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடா்பு கொண்டு தகவலை கூறி மருத்துவ குழுவை தயாா் நிலையில் இருக்கும்படி கூறினாா்.

அந்த விமானம் சென்னையில் தரையிறங்கியதும் தயாராக இருந்த மருத்துவ குழுவினா் விமானத்தில் ஏறி பயணியை பரிசோதித்தனா். ஆனால் பஷீா், விமானம் நடுவானில் பறந்து வந்தபோதே கடுமையான மாரடைப்பால் விமான இருக்கையிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதனால் விமானத்தில் இருந்த சகபயணிகளும், விமான ஊழியா்களும் சோகமடைந்தனா்.

சென்னை விமான நிலைய போலீசாா் உயிரிழந்த பயணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த விமானம் வழக்கமாக அதிகாலை 4,30 மணிக்கு வந்து விட்டு மீண்டும் அதிகாலை 5.30 மணிக்கு துபாய் புறப்பட்டு செல்லும். ஆனால் பயணி ஒருவா் விமானத்தின் உள்ளேயே உயிரிழந்து விட்டதால் விமானத்தை முழுமையாக சுத்தப்படுத்திய பின்பு தாமதமாக நேற்று காலை 7 மணிக்கு துபாய்க்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது.

Next Story