மாணவ-மாணவிகளை சாதியை சொல்லி திட்டிய அரசு பள்ளி தலைமை ஆசிரியை கைது


மாணவ-மாணவிகளை சாதியை சொல்லி திட்டிய அரசு பள்ளி தலைமை ஆசிரியை கைது
x
தினத்தந்தி 19 Jan 2022 9:03 PM GMT (Updated: 19 Jan 2022 9:03 PM GMT)

மாணவ, மாணவிகளை சாதியை சொல்லி திட்டிய விவகாரத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

திருப்பூர்,

திருப்பூர் அருகே இடுவாயில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக கீதா (வயது 51) என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 17-ந்தேதி பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையை பட்டியலின மாணவ-மாணவிகளை சுத்தம் செய்யச்சொன்னதாகவும், சுத்தம் செய்ய மறுத்த மாணவ-மாணவிகளை சாதிப்பெயரைச் சொல்லி திட்டியதாகவும் தலைமை ஆசிரியை கீதா மீது புகார் எழுந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியை மீது திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை செய்தனர். விசாரணைக்கு பின்னர் தலைமை ஆசிரியை கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தலைமை ஆசிரியை கைது

இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந்தேதி ஆதிதிராவிடர் நலத்துறையின் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சரவணகுமார் தலைமை ஆசிரியை கீதா மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில் தலைமை ஆசிரியை கீதா மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையில் கீதா சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இவருடைய முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கீதா நேற்று திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் சரணடைந்தார். இதுகுறித்த விவரம் மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து தலைமை ஆசிரியை கீதாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story