தடுப்பு சுவரில் கார் மோதியதில் கணவன் மனைவி பலி..!


தடுப்பு சுவரில் கார் மோதியதில் கணவன் மனைவி பலி..!
x
தினத்தந்தி 18 April 2022 4:13 PM GMT (Updated: 18 April 2022 4:13 PM GMT)

சின்னசேலம் அருகே தடுப்பு சுவரில் கார் மோதியதில் புதுச்சேரியை சேர்ந்த கணவன் மனைவி உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி:

புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 63), மனைவி ஞானாம்பாள் (55), மகன் ராஜேஷ் (24) மற்றும்  புவனேஸ்வரி (57),  தனலட்சுமி (49) ஆகியோர்கள் சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் உள்ள  உறவினர்  வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றனர்.

பின்னர் காரில் புதுச்சேரிக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னசேலம் அருகே கார் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சென்டர் மீடியம் தடுப்பு சுவரில் கார் மோதி  விபத்துக்குள்ளானது.

இதில் யுவராஜ், அவரது மனைவி ஞானாம்பாள் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த ராஜேஷ் மற்றும் காரில் இருந்த தனலட்சுமி, புவனேஸ்வரி ஆகியோரை சின்னசேலம் போலீசார்  கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  

இந்த விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  தடுப்பு சுவரில் கார்மோதி சம்பவ இடத்திலேயே கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில்  பரபரப்பு காணப்பட்டது.


Next Story