பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்


பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 4 May 2022 12:03 AM GMT (Updated: 4 May 2022 12:03 AM GMT)

தமிழகத்தில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ-மாணவிகள் எழுதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.

சென்னை,

கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. மாதாந்திர தேர்வு, காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது.

1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர். பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த முடியாத காரணத்தால், ‘ஆன்லைன்' வகுப்புகள் வழியாகவே பாடங்கள் நடத்தப்பட்டன.

நேரடி வகுப்புகள் தொடக்கம்

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் படிப்படியாக தொடங்கப்பட்டது. முதலில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கும், அதன் பின்னர் 6 முதல் பிளஸ்-1 வகுப்பு வரையிலும் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது.

கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும், தொடர்ந்து மழலையர் வகுப்புகளும் தொடங்கப்பட்டன. 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தாமதமாக தொடங்கப்பட்டதால், மாணவர்கள் தேர்வை சந்திக்கும் வகையில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டது.

பொதுத்தேர்வு ஏற்பாடுகள்

பள்ளி வேலை நாட்கள் குறைவாக இருந்ததால், சனிக்கிழமைகளிலும் விடுமுறை இன்றி வகுப்புகள் நடைபெற்றன. காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை என்றாலும், மாதாந்திர தேர்வுகள் நடத்தப்பட்டு, மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டன. திருப்புதல் தேர்வும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

தற்போது, கொரோனா பரவல் குறைவாக இருந்தாலும், இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என்பதில், பள்ளி கல்வித்துறை திட்டவட்டமாக உள்ளது. அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

பிளஸ்-2 தேர்வு நாளை தொடக்கம்

தேர்வு மையங்கள், பறக்கும் படைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மாவட்ட வாரியாக முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் நடந்தன. இந்த நிலையில், பிளஸ்-2 தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வரும் 28-ந் தேதி வரை நடக்க இருக்கிறது.

அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை மறுநாள் (6-ந் தேதி) தொடங்கி 30-ந்தேதி வரை நடக்கிறது. பிளஸ்-1 தேர்வு 10-ந் தேதி ஆரம்பித்து 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு 3,119 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் எழுதுகிறார்கள். இதில், மாணவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 பேரும் அடங்குவார்கள்.

எஸ்.எஸ்.எல்.சி. - பிளஸ்-1 தேர்வு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மொத்தம் 3,936 மையங்களில் நடக்கிறது. இந்தத் தேர்வை, 9 லட்சத்து 55 ஆயிரத்து 474 பேர் எழுதுகிறார்கள். இதில், மாணவர்கள் 4 லட்சத்து 86 ஆயிரத்து 887 பேர், மாணவிகள் 4 லட்சத்து 68 ஆயிரத்து 587 பேர் ஆவார்கள்.

அதேபோல், பிளஸ்-1 பொதுத் தேர்வு 3,119 மையங்களில் நடக்கிறது. இந்தத் தேர்வை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகிறார்கள். இதில், 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும் அடங்குவார்கள்.

1,000 பறக்கும் படைகள் அமைப்பு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை மொத்தம் 26 லட்சத்து 76 ஆயிரத்து 675 பேர் எழுத இருக்கின்றனர். இதில், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 3 மாணவர்களும் அடங்குவார்கள். மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 1,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்க ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் செல்போன் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷூ, பெல்ட் அணிந்து வரவும் அனுமதி இல்லை.

தேர்வு எழுதும் 414 சிறை கைதிகள்
பிளஸ்-2 தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்க இருக்கும் நிலையில், இந்த தேர்வை சிறைக்கைதிகளும் எழுத இருக்கிறார்கள். அதாவது, பிளஸ்-2 தேர்வை 73 பேரும், பிளஸ்-1 தேர்வை 99 பேரும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 242 பேரும் என மொத்தம் 414 கைதிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதில், ஆண் கைதிகள் 186 பேரும், பெண் கைதிகள் 28 பேரும் அடங்குவார்கள்.

காப்பி அடித்தால் என்ன தண்டனை?
தேர்வின்போது, தேர்வு எழுதுபவர்கள் ஆட்சேபனைக்குரிய பொருட்களை வைத்திருந்து பயன்படுத்தி இருந்தால், அன்றைய தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், அடுத்த ஓராண்டு, அதாவது இரு பருவத் தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும்.

தேர்வு எழுதுபவர், இன்னொருவரின் விடைத்தாளை பார்த்து எழுதினாலோ, அல்லது பிறரின் உதவியோடு தேர்வு எழுதினாலோ, அந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், சூழ்நிலை மற்றும் சான்றுகளின் அடிப்படையில் ஓராண்டு அல்லது அடுத்த இருபருவத் தேர்வுகளுக்கும் அதிகமான பருவங்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

ஆள்மாறாட்டம் செய்தால், அப்பருவத் தேர்வு ரத்து செய்யப்படுவதுடன் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும்.

Next Story