வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற வாலிபர்


வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற வாலிபர்
x
தினத்தந்தி 9 May 2022 7:47 PM GMT (Updated: 9 May 2022 7:47 PM GMT)

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியவர், நேரடியாக பக்கத்து வீட்டுக்குள் புகுந்து கட்டையால் அடித்து விவசாயியை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையின் முகத்தை பார்க்கும் முன் அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் அண்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சித்திரைவேலு (வயது 65), விவசாயி. இவருக்கு விஜயராணி என்ற மனைவியும், சுரேஷ் என்ற மகனும் உள்ளனர்.

சித்திரைவேலுவின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நாகூர் பிச்சை. இவர்கள் இருவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

நாகூர் பிச்சையின் மகன் செல்வம் (35). குவைத் நாட்டில் வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணமாகி தற்போது குழந்தை பிறந்துள்ளது. வெளிநாட்டில் இருக்கும் மகன் செல்வத்திடம், இங்கு பக்கத்து வீட்டில் இருக்கும் சித்திரைவேலு தங்களிடம் அடிக்கடி சண்டை போடுவதாக செல்போனில் அவருடைய பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் செல்வத்துக்கு பக்கத்து வீட்டினர் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

அடித்துக்கொலை

இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பி நேற்றுமுன்தினம் மாலை திருச்சி விமான நிலையம் வந்து சேர்ந்த செல்வம், அங்கிருந்து அண்டக்குடி கிராமத்திற்கு வாடகை காரில் புறப்பட்டு சென்றார். காரை விட்டு இறங்கி அவர் தனது வீட்டிற்கு கூட செல்லாமல், தனது குழந்தையையும் பார்க்காமல், வந்த கையோடு நேரடியாக சித்திரைவேலு வீட்டுக்கு சென்றார். அங்கு கீழே கிடந்த கட்டையை எடுத்து சித்திரைவேலுவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் தேவக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.

Next Story