சிவகங்கை: மீன் பிடித்திருவிழாவில் 30 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


சிவகங்கை: மீன் பிடித்திருவிழாவில் 30 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
x
தினத்தந்தி 11 May 2022 6:57 AM GMT (Updated: 11 May 2022 6:57 AM GMT)

சிவகங்கை அருகே மீன் பிடித் திருவிழாவில் 30ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மீன்களை பிடித்து சென்றனர்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் ஏரியூர் அருகே கழுங்குப்பட்டியில்  ஏரிக்கண்மாய்  உள்ளது. இட்ந்த கண்மாய் 3 டிஎம்சி தண்ணீரை ஒரே நேரத்தில் தேக்கி வைக்க கூடிய அளவிற்கு  மிகப் பெரிய கண்மாய் ஆகும்.

இந்த கண்மாய்க்கு நீர் வரத்தாக மதுரை மாவட்டத்தில் உள்ள கரந்தமலை, எறக்காழ மலை, அழகர்கோவில் மலை, பூதகுடி மலை,போன்ற மலைகளில் இருந்து பருவகாலங்களில் பெய்யப்படும் மழைநீர் ஏரிக்கண்மாய்க்கு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில் ,

இந்த தண்ணீரை வைத்துதான் நாங்கள் விவசாயம் செய்து வருகின்றோம். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் இந்த கண்மாய் தண்ணீர் வரத்து பாதை சீமை கருவேல மரங்களால் முற்றிலுமாக தடை பட்டது.  இந்நிலையில் கடந்த மாவட்ட ஆட்சியாளர் ஜெயகாந்தன் முயற்சியினால் அரசு ஜே.சி.பி எந்திரங்கள் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 

மேலும்,சென்ற ஆண்டு பெய்த பலத்த மழையால் இந்த ஏரிக்கண்மாய் நிரம்பி வழிந்தது. அதேபோன்று இந்த ஆண்டும் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக, ஏரிக்கண்மாய் தன்னுடைய முழு கொள்ளளவை எட்டிய காரணத்தினால் இருபோக விவசாயத்தை இப்பகுதியில் விவசாயிகள் மேற்கொண்டனர் என்று கூறினர். 

விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்கப்பட்ட நிலையில் மீன்பிடி திருவிழா நடத்த வேண்டும் என ஊர் மக்கள் சார்பாக முடிவெடுக்கப்பட்டு இன்று அதிகாலை சுமார் 6.30 மணி அளவில் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை,  காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, பொன்னமராவதி, நெற்குப்பை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட நபர்கள் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்று கட்லா, ரோகு, ஜிலேபி ,சிசி ,விரால் போன்ற பலதரப்பட்ட மீன்களை கச்சா, ஊத்தா, கொசுவலை, முதலிய சாதனங்களைக் கொண்டு நபர் ஒருவர் சுமார் 3 கிலோவிலிருந்து 5 கிலோ வரை அதிகப்படியான மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர்.

மீன்பிடி திருவிழா நடத்தப்படுவதால் வரும் காலங்களில் விவசாயம் செழிக்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story