குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தி வீடியோ எடுக்க முயற்சி - பெயிண்டர் கைது...!


குளியலறையில் ரகசிய  கேமரா பொருத்தி வீடியோ எடுக்க முயற்சி - பெயிண்டர் கைது...!
x
தினத்தந்தி 14 May 2022 6:18 AM GMT (Updated: 14 May 2022 6:18 AM GMT)

வத்தலகுண்டு அருகே குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தி வீடியோ எடுக்க முயற்சி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

வடமதுரை ,

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாம் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் வீட்டு வேலைகளை முடித்து விட்டு குளிப்பதற்காக வீட்டின் வெளிப்புறம் உள்ள குளியலறைக்குச் சென்றுள்ளார்.  

அவர் குளியலறையை சுற்றிப் பார்க்கும்போது குளியலறையின் மேற்பகுதியில் கருப்பு நிறத்தில் சிறிய அளவிலான கேமரா ஒன்று பொருத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தனது வீட்டில் இருப்பவர்களிடம் அந்த பெண் கூறினார். இதனை அடுத்து  வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்தனர்.

உடனடியாக வத்தலகுண்டு போலீசார் விரைந்து சென்ற ஆய்வு செய்து கேமராவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், இலங்கை அகதிகள் முகாம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் வேலை செய்யும் விஜயகுமார் என்பவர் கேமராவை பொருத்தி இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. தற்போது அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,

யூடியூப் சேனலை பார்த்து தானியங்கி வெப் கேமரா ஒன்றை தயாரித்து, செல்போனுக்கு பயன்படுத்தும் பவர் பேங்க் மூலம் கேமராவை இயங்கச் செய்து உள்ளார். 

பின்னர் கேமராவில் பொருத்தப்பட்டுள்ள மெமரி கார்டு மூலம் காட்சிகள் பதிவாகுமாறு தயார் செய்து குளியலறையில் பொருத்தியது விசாரணையில் தெரியவந்து உள்ளது.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story