விராலிமலையில் லாரி மீது கார் மோதியதில் வக்கீல் பலி; 3 பேர் படுகாயம் சபரிமலைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பரிதாபம்


விராலிமலையில்  லாரி மீது கார் மோதியதில் வக்கீல் பலி; 3 பேர் படுகாயம் சபரிமலைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 16 May 2022 6:05 PM GMT (Updated: 16 May 2022 6:05 PM GMT)

விராலிமலையில், சபரிமலைக்கு சென்றுவிட்டு திரும்பிய போது லாரி மீது கார் மோதியதில் வக்கீல் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.

விராலிமலை:
சபரிமலைக்கு பயணம்
கடலூர் மாவட்டம், துரைச்சாமி நகரை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் முகுந்தன் (வயது 40). இவர், தனது நண்பர்களான கிருபாசங்கர் மகனும் வக்கீலுமான ஹேமந்த்குமார் (30), கலியபெருமாள் மகன் சுப்பிரமணியன், சேக்ஆதாம் மகன் சேக்உசேன் ஆகியோருடன் காரில் கடந்த 14-ந்தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றார்.
அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் காரில் கடலூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை சேக் உசேன் ஓட்டினார். 
வக்கீல் பலி 
கார் நேற்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி உருக்குலைந்தது. 
காரில் இருந்த வக்கீல் ஹேமந்த் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த முகுந்தன், சுப்பிரமணியன், சேக் உசேன் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். 
3 பேர் காயம் 
விபத்தை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் விராலிமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி, மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். 
இதற்கிடையே ஹேமந்த் குமார் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story