டி.என்.பாளையம் அருகே கார்கள் மோதல்; 7 பேர் காயமின்றி உயிர் தப்பினர்- கண்காணிப்பு கேமராவில் பதிவான விபத்து காட்சி வைரல்


தினத்தந்தி 31 July 2022 9:33 PM GMT (Updated: 31 July 2022 9:37 PM GMT)

டி.என்.பாளையம் அருகே கார்கள் மோதல்; 7 பேர் காயமின்றி உயிர் தப்பினர்- கண்காணிப்பு கேமராவில் பதிவான விபத்து காட்சி வைரல்

ஈரோடு

டி.என்.பாளையம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தனது குடும்பத்தை சேர்ந்த 4 பேருடன் காரில் பெங்களூருக்கு நேற்று காலை சென்றார். காரை பாஸ்கர் ஓட்டினார்.

இதேபோல் கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் தனது உறவினர் ஒருவருடன் காரில் பெங்களூரு நோக்கி சென்றார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்- அத்தாணி சாலையில் டி.என்.பாளையத்தை அடுத்த காளியூர் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவை பாஸ்கரின் கார் முந்தி உள்ளது. அப்போது பின்னால் வந்த ஜெயச்சந்திரனின் காரும், பாஸ்கரின் காரை முந்த முயன்று உள்ளது. இதில் எதிர்பாராதவிதமாக ஜெயச்சந்திரனின் கார், பாஸ்கர் காரின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் 2 கார்களும், அருகில் இருந்து விவசாய நிலத்துக்குள் புகுந்தது. இந்த விபத்தில் பாஸ்கர் காரில் வந்த 5 பேரும், ஜெயச்சந்திரன் காரில் வந்த 2 பேர் என மொத்தம் 7 பேர் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து காட்சி அந்த பகுதியில் உள்ள எடை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரல் ஆகி பரபரப்பை எற்படுத்தி உள்ளது.


Next Story