அ.தி.மு.க. பொதுக்கூட்டம்


அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 22 Sep 2022 6:41 PM GMT (Updated: 22 Sep 2022 6:50 PM GMT)

வேதாரண்யத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ராஜாஜி பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கிரிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சண்முகராஜ், நகர செயலாளர் நமச்சிவாயம், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகையில், நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட காரணமாக இருந்தவர் அண்ணா. அவர் காட்டிய வழியில் அ.தி.மு.க. தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறது. அண்ணா வழியில் நடப்போம் என கூறும் தி.மு.க.வினர் மக்களுக்காக எதையுமே செய்யவில்லை. தேர்தலில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. சட்டம்-ஒழுங்கும் சீர்குலைந்துள்ளது. மின்கட்டணம், வீட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த ஒரு திட்டத்தையும் முறையாக செயல்படுத்தாமல் நம்ம ஊரு சூப்பரு என ஊர்தோறும் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி கட்சி தேர்தலில் பொதுச் செயலாளராக வெற்றி பெறுவார் என்று கூறினார். முடிவில் மகளிர் அணி கலைச்செல்வி நன்றி கூறினார். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் இளவரசி, திலீபன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் அம்பிகாதாஸ், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், சவுரிராஜன், பேரூராட்சி தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story