சென்னையில் 9-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் -எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


சென்னையில் 9-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் -எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x

அரசு போக்குவரத்து கழகத்தை தனியார்மயமாக்கும் போக்கை கண்டித்து சென்னையில் 9-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

போக்குவரத்து துறையில் எங்கெங்கெல்லாம் தனிப்பட்ட முறையில் பலன்பெற முடியும் என்பதை ஆராய்ந்து, அதற்கேற்ற வகையில் தி.மு.க. அரசு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.இந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் 15-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கவும்; போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கும் உள்நோக்கத்தோடு டெண்டர் முறையில் டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் நடவடிக்கையை உடனடியாக கைவிடவும், 100 நாட்களுக்குள் வழங்குவதாக உறுதியளித்த பழைய ஓய்வூதியம்; ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி மற்றும் பணப்பயன்களை உடனடியாக வழங்கவும், தி.மு.க. அரசை வலியுறுத்தி, அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பில் வருகிற 9-ந்தேதி பிற்பகல் 3 மணியளவில், சென்னை, பல்லவன் அலுவலகம் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

டி.ஜெயக்குமார் தலைமையில்...

இந்த கண்டன ஆர்ப்பாட்டம், கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தலைமையிலும்; அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலையிலும் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அனைத்து மண்டலங்களிலும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொழிலாளர்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்.

தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தியும் நடைபெற உள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story