தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு திரும்ப இன்று சிறப்பு பஸ்கள் இயக்கம்


தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு திரும்ப இன்று சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு மக்கள் பஸ், ரெயில் மற்றும் விமானங்களில் புறப்பட்டு சென்றனர்.

சென்னை,

சென்னையில் வேலை மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வசித்து வரும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக கடந்த வாரம் பஸ், ரெயில் மற்றும் விமானங்களில் புறப்பட்டு சென்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வந்ததால் மறுநாள் அதாவது நேற்று திங்கட்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்தது. இதனை தொடர்ந்து இன்று (செவ்வாய்கிழமை) அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்படுகிறது. வெளியூர் சென்றவர்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 7 ஆயிரம் பஸ்களை பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு இயக்குகிறது. இதில் சொந்த ஊர் சென்றவர்கள் இன்று மீண்டும் சென்னைக்கு திரும்புகின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, 'முதல்-அமைச்சரின் உத்தரவின் படி, தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பொதுமக்களின் வசதிக்காக பிற ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ய சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இன்று (செவ்வாய்க்கிழமை) மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பஸ்களுடன், கூடுதலாக பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 975 பஸ்களும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 1,395 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

தொடர்ந்து நாளை (புதன்கிழமை) தினசரி இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பஸ்களுடன், கூடுதலாக பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 917 பஸ்களும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 1,180 பஸ்களும் இயக்கப்படுகின்றன. ஆக மொத்தம் 3 நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 6 ஆயிரத்து 300 பஸ்கள், பல்வேறு இடங்களில் இருந்து கூடுதலாக சென்னைக்கு 3 ஆயிரத்து 167 மற்றும் சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 3 ஆயிரத்து 825 பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பான முறையில் சேவை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


Next Story