சேலத்தில் ருசிகரம்: மோட்டார் சைக்கிளை திருடி உரிமையாளரிடமே சாவி செய்ய சொன்ன என்ஜினீயர் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்


சேலத்தில் ருசிகரம்:  மோட்டார் சைக்கிளை திருடி உரிமையாளரிடமே சாவி செய்ய சொன்ன என்ஜினீயர்  பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
x

மோட்டார் சைக்கிளை திருடிச்சென்று உரிமையாளரிடமே சாவி செய்ய சொன்ன என்ஜினீயரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சேலம்

மோட்டார் சைக்கிள் திருட்டு

சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் உசேன். இவர் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களுக்கு சாவி செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

இவர் கடந்த 18-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளை புதிய பஸ் நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்த போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போய் இருந்தது. இது குறித்து அவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

சாவி செய்ய சொன்னார்

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற வாலிபர் மோட்டார் சைக்கிளுக்கு சாவி சரியில்லை என்றும், அதற்கு புது சாவி செய்து கொடுக்கும்படி வாகன உரிமையாளரான உசேனிடமே நேற்று காலை அணுகி உள்ளார்.

அப்போது மோட்டார் சைக்கிளை பார்த்த அவர் திடுக்கிட்டார். திருட்டு போன தனது மோட்டார் சைக்கிளுக்கு தன்னிடமே சாவி செய்து கொடுக்கும் படி மர்ம நபர் வந்துள்ளதை கண்டு உசேன் சுதாரித்தார். உடனே அவர் அந்த நபரை நிற்க சொல்லி விட்டு பக்கத்து கடைக்காரர்களிடம் பேசுவது போன்று திருடன் குறித்த விவரத்தை கூறி உள்ளார்.

ருசிகர சம்பவம்

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் வாலிபரை மடக்கி பிடித்து சேலம் டவுன் போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் கருப்பூர் அருகே உள்ள செங்கரடு பகுதியை சேர்ந்த மோகன் (வயது 28) என்பதும், என்ஜினீயரான இவர் வேலையில்லாமல் இருப்பதும், மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் மோகனை கைது செய்து வேறு எந்தெந்த இடத்தில் திருடி உள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருடிய மோட்டார் சைக்கிளுக்கு சாவி செய்ய சென்ற போது உரிமையாளரிடமே திருடன் சிக்கிய ருசிகர சம்பவம் நேற்று சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Next Story