அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு


அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு
x
தினத்தந்தி 18 Nov 2023 3:04 AM GMT (Updated: 18 Nov 2023 3:16 AM GMT)

கல்லூரிகளில் கூடுதலாக செமஸ்டர் கட்டணத்தை செலுத்தியவர்கள் அதை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 440 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இளநிலை, முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புகளை படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் – டிசம்பர் மாதத்திலும், ஏப்ரல் – மே மாதத்திலும் பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், அண்ணாபல்கலைக்கழக பருவத் தேர்வுக்கான கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டது.

அதன்படி, இளநிலை பருவத் தேர்வு மற்றும் செயல்முறை தேர்வுக்கான கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.150-ல் இருந்து ரூ.225 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, இளநிலை பட்டப்படிப்பு ஆய்வறிக்கை கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பருவத் தேர்வு, செயல்முறைத் தேர்வு, செயல்முறைப் பயிற்சி, கோடைகால ப்ராஜெக்ட் கட்டணம் ரூ.450-ல்இருந்து ரூ.650 ஆகவும், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல், பட்டப் படிப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்கான கட்டணம் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு ரூ.1,000-ல் இருந்து, ரூ.1,500 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. இறுதி ஆண்டு மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல், பட்டப்படிப்பு சான்றிதழ்கள் ஆகியவை டிஜிலாக்கரில் பதிவேற்றம் செய்ய ரூ.1,500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.

பருவத்தேர்வு கட்டணம் தாள்ஒன்றுக்கு ரூ.75 முதல் ரூ.200 வரை அதிகரித்திருப்பது மாணவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நடப்பு செமஸ்டருக்கு தேர்வுக் கட்டணம் உயர்த்தப்படாது. மாணவர்கள் வழக்கமான கட்டணத்தை செலுத்தினாலே போதும். அடுத்த கல்வி ஆண்டில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வுக்கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். கல்லூரிகளில் கூடுதலாக செமஸ்டர் கட்டணத்தை செலுத்தியவர்கள் அதை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story