மாடுகளை திருடியவர் கைது


மாடுகளை திருடியவர் கைது
x
தினத்தந்தி 27 Sep 2022 6:45 PM GMT (Updated: 27 Sep 2022 6:45 PM GMT)

மொரப்பூர் அருகே மாடுகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி

மொரப்பூர்:

மொரப்பூர் அருகே உள்ள நடுப்பட்டி சேர்ந்தவர் சிதம்பரம். விவசாயி. இவர் கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த மாடுகளை தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார். சம்பவத்தன்று சிதம்பரம் தோட்டத்துக்கு சென்றபோது 3 பேர் கறவை மாடுகளை சரக்கு வேனில் ஏற்றி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அதற்குள் அந்த நபர்கள் மாடுகளை ஏற்றி கொண்டு பனமரத்துப்பட்டி நோக்கி சென்ற போது ஏரிக்கரை அருகே சரக்கு வேன் விபத்திற்குள்ளானது. இதனால் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த திருட்டு குறித்து சிதம்பரம் மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடு திருடிய நபர்களை தேடி வந்தனர். நேற்று முன்தினம் போலீசார் மொரப்பூர் ரெயில்வே மேம்பால பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அங்கு நின்று இருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் ஓமலூர் அருகே உள்ள கணவாய்பட்டியை சேர்ந்த தமிழரசன் (வயது 32) என்பதும், மாடுகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தமிழரசனை கைது செய்தனர். இதில் தொடர்புடைய வேன் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story