காரிமங்கலம் அருகே லாரிகளுக்கு இடையில் சிக்கி அண்ணன்- 2 தங்கைகள் உடல் நசுங்கி பலி-மொபட்டில் சென்றபோது பரிதாபம்
காரிமங்கலம்:
தர்மபுரி அருகே மொபட்டில் சென்றபோது 2 லாரிகளுக்கு இடையில் சிக்கி அண்ணன், 2 தங்கைகள் உடல் நசுங்கி பலியாகினர்.
அண்ணன்-தங்கைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் தாம்சன்பேட்டையை சேர்ந்தவர் சிவசந்திரன். பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இவருக்கு மணிகண்டன் (வயது 35) என்ற மகனும், லாவண்யா (25), இந்துமதி (20) ஆகிய மகள்களும் இருந்தனர். டிப்ளமோ என்ஜினீயரான மணிகண்டனுக்கு திருமணம் ஆகவில்லை.
இந்தநிலையில் பல் சிகிச்சைக்காக லாவண்யா தர்மபுரியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்று மணிகண்டனிடம் கூறினார். அதன்படி நேற்று மாலை மணிகண்டன் தனது தங்கைகள் லாவண்யா மற்றும் இந்துமதியை மொபட்டில் அழைத்து கொண்டு தர்மபுரிக்கு புறப்பட்டார்.
லாரி மோதியது
இந்த மொபட் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி பகுதியில் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. அப்போது முன்னால் மெதுவாக சென்ற கன்டெய்னர் லாரியை மணிகண்டன் முந்த முயன்றார். இதனால் அவர் மோட்டார் சைக்கிளை வலது புறமாக திருப்பினார்.
அந்த நேரம் சேலத்துக்கு வெங்காயம் ஏற்றி சென்ற லாரி மோட்டார் சைக்கிளின் பின் பக்கம் மோதியது. மேலும் முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதி, மணிகண்டன், லாவண்யா, இந்துமதி ஆகியோரை நசுக்கியது.
அண்ணன், தங்கைகள் பலி
இந்த கோர விபத்தில் லாரிகளுக்கு இடையில் சிக்கி மணிகண்டன், லாவண்யா, இந்துமதி ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்து மற்றும் காரிமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் சிக்கி பலியான அண்ணன், தங்கைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணிகண்டனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று, இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.
சோகம்
இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காரிமங்கலம் அருகே விபத்தில் அண்ணன், தங்கைகள் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருமணம் நிச்சயமான பெண்
காரிமங்கலம் அருகே லாரி மோதி உடல் நசுங்கி பலியான லாவண்யா பட்டதாரி ஆவார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, 2 மாதங்களில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் அவருடைய குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதனிடையே லாவண்யாவுக்கு பல் சிகிச்சை மேற்கொள்ள தர்மபுரியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்ற போது தான், அவர் உள்பட 3 பேரும் விபத்தில் சிக்கி பலியாகினர். இதனால் அவர்களுடைய பகுதி சோகத்தில்மூழ்கியது.