ஆரல்வாய்மொழியில் கார்-பஸ் மோதல்; 1 வயது குழந்தை பலி;தம்பதி உள்பட 3 பேர் காயம்


ஆரல்வாய்மொழியில் கார்-பஸ் மோதல்; 1 வயது குழந்தை பலி;தம்பதி உள்பட 3 பேர் காயம்
x

ஆரல்வாய்மொழியில் கார்-பஸ் மோதிய விபத்தில் 1 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழியில் கார்-பஸ் மோதிய விபத்தில் 1 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

கார்-பஸ் மோதல்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தியாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 32). இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி விஜிலா (30), தக்கலை அருகே பொன்மனையில் கனரா வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 1 வயதில் யாழ்நிலா என்ற குழந்தை இருந்தது.

இதற்கிடையே சொந்த ஊருக்கு பிரேம்குமார் வந்திருந்தார். இந்தநிலையில் நேற்று இரவில் பொன்மனையில் இருந்து மனைவியை அவர் காரில் அழைத்துக் கொண்டு ராதாபுரம் நோக்கி சென்றார். காரில் பிரேம்குமாரின் தாயார் மல்லிகாவும் (55), குழந்தை யாழ்நிலாவும் இருந்தனர்.

ஆரல்வாய்மொழி சோதனை சாவடி பக்கம் வந்த போது எதிர்பாராதவிதமாக காரும், அந்த வழியாக வந்த அரசு பஸ்சும் மோதிக்கொண்டன.

குழந்தை சாவு

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதனால் காருக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் செல்லும் வழியில் குழந்தை யாழ்நிலா பரிதாபமாக உயிரிழந்தது. காயமடைந்த மற்ற 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரேம்குமார் வெளிநாடு செல்ல இருந்த நிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

மேலும் இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story