தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது -மத்திய அரசு அறிவிப்பு


தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது -மத்திய அரசு அறிவிப்பு
x

தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட இருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், சிறப்பாக பணி புரிந்த ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் வகையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் நல்லாசிரியர் விருதுகள், சான்றிதழ்களை வழங்கி வருகின்றன.

அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது தொடர்பான அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. அதன்படி, நாடு முழுவதும் இருந்து விண்ணப்பித்த ஆசிரியர்களில் சிறந்த 50 ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

2 ஆசிரியர்கள் யார்?

இதில் பீகார், ஆந்திராவில் இருந்து அதிகபட்சமாக தலா 3 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதையடுத்து தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், ஒடிசா, உத்தரபிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 2 பேரும், மற்ற மாநிலங்களில் இருந்து ஒருவரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமாரும், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.மாலதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் விழா

தேசிய ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.

இதேபோல் தமிழ்நாட்டில் மாநில அரசு சார்பில் 385 ஆசிரியர்களுக்கு விருதுகள் அதே நாளில் வழங்கப்பட உள்ளன. இந்த விருது பெற உள்ளவர்களின் பட்டியலை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பட்டியலை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story