கோவை, திண்டுக்கல், மதுரை உள்பட 13 மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு


கோவை, திண்டுக்கல், மதுரை உள்பட 13 மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
x

கோவை, திண்டுக்கல், மதுரை உள்பட 13 மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னை,

தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக வரக்கூடிய நாட்களிலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல், நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுதினம் (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி போன்ற 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், 'செங்கம் 10 செ.மீ., காட்டுப்பாக்கம், வல்லம் தலா 6 செ.மீ., பெருஞ்சாணி அணை, புத்தன் அணை தலா 5 செ.மீ., செங்கல்பட்டு, வாலாஜாபாத், திருமங்கலம், பூண்டி, அவலூர்ப்பேட்டை தலா 4 செ.மீ., மணியாச்சி, சோழவரம், திருவூர், சேத்துப்பட்டு, கீழ்பென்னாத்தூர், செஞ்சி தலா 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.


Next Story